ADDED : பிப் 08, 2024 05:11 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: மங்கலம், வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன், 65. இவரது மனைவி சாந்தி, 60. இருவரும் நேற்று மாலை உருளையன்பேட்டை சீனியர் எஸ்.பி., அலுவலகம் எதிரே வந்தனர்.
திடீரென தங்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உருளையன்பேட்டை போலீசார் இருவரிடம் இருந்த பெட்ரோல் கேனை பிடுங்கி, காப்பாற்றினர்.
அங்கு வந்த சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா, இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டார்.
ஜனார்த்தனன் மனைவி சாந்தி, சீனியர் எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகாரில், மங்கலம் வடக்கு தெருவில் 35 ஆண்டுகளாக குடியிருந்து வந்த வீட்டை, சிலர் மின் இணைப்பை துண்டித்து, இடித்து ஆக்கிரமித்தனர்.
மங்கலம் போலீசில் 5 முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என, குறிப்பிட்டிருந்தார். இது குறித்து உருளையன்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
