ADDED : ஆக 06, 2025 08:53 AM
பாகூர் : பாகூர் பங்களா வீதியை சேர்ந்தவர் கந்தன் 33; கொத்தனார். இவர், நேற்று முன்தினம் பாகூரில் உள்ள மதுபான கடையில் மது குடித்து கொண்டிருந்தார்.
அப்போது, எதிர் டேபிளில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த கார்முகில், கந்தனிடம் நீ ஏன் இங்கு மது குடிக்கிறாய், ஒழுங்காய் வெளியே போய் விடு என கூறினார்.
அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கார்முகில், கந்தனை தாக்கினார். அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து கந்தனை அனுப்பினர்.
பின், அன்று இரவு, கந்தன் தனது மேஸ்திரியிடம் சம்பளம் வாங்க சென்றபோது, அவரை வழிமறித்த கார்முகில் மீண்டும் அவரை தாக்கி, பைக் சாவியால் தலையில் குத்தி விட்டு, கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றார். காயமடைந்த கந்தன் பாகூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரது புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கார்முகிலை தேடி வருகின்றனர்.