அரிக்கன்மேட்டில் அடிப்படை வசதி சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை
அரிக்கன்மேட்டில் அடிப்படை வசதி சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை
ADDED : ஆக 16, 2026 10:53 PM
புதுச்சேரி: புதுச்சேரி அரிக்கன்மேட்டில் சுத்தமான குடிநீர், பாதை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தொடர் விடுமுறை காரணமாக புதுச்சேரி கடற்கரை சாலை, நோணாங்குப்பம் பேரடைஸ் கடற்கரை, சின்ன வீராம்பட்டினம் நீலக்கொடி கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில், சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. இதுதவிர, புதுச்சேரி மெரினா கடற்கரையில் உள்ள தனியார் படகு குழாம்களிலும், சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகள், மாங்குரோவ் காடுகள், அரிக்கன்மேடு மற்றும் கடல் முகத்துவாரம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு வருகின்றனர். ஆனால், சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் அரிக்கன்மேடு பகுதியில், அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, சுத்தமான குடிநீர், கழிவறை, முறையான நடைபாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கரடு முரடான பாதையில் நடந்து செல்ல வேண்டிய நிலை இருப்பதால், முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் சிரமப்படுகின்றனர்.
எனவே, அரிக்கன்மேடு பகுதியை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் வகையில், சுற்றுலாத்துறை சார்பில், பிளாஸ்டிக் மிதவையால் படகுகள் நிறுத்தும் தளம், சுத்தமான குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
