ADDED : செப் 11, 2026 07:32 PM
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பாரதியார் மொழி மற்றும் இலக்கியப் புலத்தில் பாரதியாரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
பல்கலைக் கழகத் துணை வேந்தர் பிரகாஷ்பாபு, தமிழியல் புல வளாகத்தில் அமைந்துள்ள பாரதியாரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், புலத்தில் உள்ள அவரது படத்திற்கு மலர் துாவியும் மரியாதை செலுத்தி விழாவினை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பல்கலைக்கழக கலை மற்றும் கலாசார உறவுகளின் முன்னாள் இயக்குநர் கிளமெண்ட் லுார்து, தமிழியல் புலத் தலைவர் ரவிக்குமார் மற்றும் பேராசிரியர்கள் பாரதியின் உருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
பேராசிரியர் கிளமெண்ட் லுார்து, பாரதியாரின் பெருந்தன்மையையும் இலக்கிய ஆளுமையையும் உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு பேசினார். பகைவருக்கும் அருள்வாய் நெஞ்சே என்ற பாரதியின் வரிகளையும், ஏசுநாதரின் மன்னிப்பு உணர்வையும் ஒப்பிட்டு பேசினார். கர்சன் பிரபுவின் மனைவி மறைந்தபோது அவரது குழந்தைகளுக்காக வருந்திய பாரதியின் மாமனிதப் பண்பை நினைவுகூர்ந்தார்.
முனைவர் ரவிக்குமார், பாரதியாரோடு பத்து ஆண்டுகள், என் குருநாதர் மற்றும் சித்திரபாரதி ஆகிய நுால்களின் சிறப்புகளைப் பட்டியலிட்டார். தமிழ் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் இளங்கலை, முதுகலை மாணவர்கள் கலந்து கொண்டனர். முனைவர் ஸ்ரீ வித்யா நன்றி கூறினார்.
