ADDED : செப் 04, 2026 07:11 PM
புதுச்சேரி: லாஸ்பேட்டை பகுதியில் பள்ளி மாணவகள் ஓட்டி வந்த பைக் மற்றும் ஸ்கூட்டரை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரியில் 18 வயதிற்கு குறைவான பள்ளி மாணவ, மாணவியர், பைக் மற்றும் ஸ்கூட்டர் ஓட்டுவதால், விபத்துகள் அதிகரித்து வருவதாக போக்குவரத்து போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, போக்குவரத்து சீனியர் எஸ்.பி. திவ்யா உத்தரவின் பேரில், வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வேலயன் தலைமையில் போலீசார் நேற்று லாஸ்பேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக பைக் மற்றும் ஸ்கூட்டர் ஓட்டி வந்த பள்ளி மாணவர்களை போலீசார் பிடித்து, வாகனங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, பெற்றோர்கள் தங்களது 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளிடம் வாகனங்களை கொடுத்து அனுப்பக் கூடாது. மீறினால் பெற்றோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தனர்.
