போக்குவரத்திற்கு இடையூறு இ.சி.ஆரில் பைக்குகள் பறிமுதல்
போக்குவரத்திற்கு இடையூறு இ.சி.ஆரில் பைக்குகள் பறிமுதல்
ADDED : ஜூன் 02, 2026 01:37 AM

புதுச்சேரி: இ.சி.ஆர்., கொக்கு பார்க் சிக்னல் தனியார் நிறுவனம் அருகே போக்குவரத்திற்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளை போக்குவரத்து போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி கொக்கு பார்க் சிக்னல் முதல் சிவாஜி சிலை சதுக்கம் வரை இ.சி.ஆரின் இருபுறமும் ஏராளமான ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளன.
இந்நிலையில், இ.சி.ஆரில் செயல்பட்டு தனியார் நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களது பைக் மற்றும் கார்களை சாலையோரம் விதிகளை மீறி போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
இதனால், இ.சி.ஆர். வழியே செல்லும் பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, கடும் அவதிக்குள்ளாகி வருகின்றன. இதுகுறித்த புகார்களின் பேரில் வடக்கு போக்குவரத்து போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன் தனியார் நிறுவனம் மற்றும் வணிக வளாகங்களுக்கு நேரில் சென்று போக்குவரத்திற்கு இடையூறாக ஊழியர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தக் கூடாது என அறிவுறுத்தினர்.
இருப்பினும், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களது பைக்குகளை சாலையோரம் போக்குவரத்திற்கு இடையூறாகநிறுத்தி வருவது தொடர்கதையாக நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில், வடக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலயன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை கொக்கு பார்க் சிக்னல் அருகே இ.சி.ஆரில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, போக்குவரத்திற்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து தனியார் நிறுவனம் அருகே நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இனி சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர். மேலும், சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டி கடைகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
