/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உழவர்கரைக்கு மல்லுகட்டும் பா.ஜ.,
/
உழவர்கரைக்கு மல்லுகட்டும் பா.ஜ.,
ADDED : பிப் 08, 2026 04:06 AM
என்.ஆர்.காங்., கட்சிக்கு விருப்பமான தொகுதிகளில் ஒன்று உழவர்கரை தொகுதி. கட்சி பிறந்த நாளில் இருந்து உழவர்கரை தொகுதியில் கூட்டணி கட்சிக்கு விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறது.
கடந்த 2011ம் ஆண்டு தேர்தலில் என்.ஆர்.காங்.,-பா.ஜ., இடையே கடும் போட்டி நிலவியது. என்.ஆர்.காங்., வேட்பாளர் பன்னீர்செல்வம் 9071 ஓட்டுகளுடன் வெற்றிப் பெற்று அமைச்சரானார். அடுத்து வந்த 2016ம் ஆண்டு தேர்தலில் காங்.,கட்சியுடன் என்.ஆர்.காங்., கட்சி மீண்டும் மல்லுகட்டியது. இந்த தேர்தலில் காங்., கட்சியின் வேட்பாளர் பாலன், 14,703 ஓட்டுகளுடன் வெற்றிப் பெற்றார். என்.ஆர்.காங்., பன்னீர்செல்வம் 7,596 ஓட்டுகளுடன் தோல்வியடைந்தார்.
கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் என்.ஆர்.காங்., சார்பில் போட்டியிட்ட பன்னீர்செல்வம்(11,121) தோல்வியடைந்தார். சுயேச்சை வேட்பாளர் சிவசங்கர்(11,940) ஓட்டுகளுடன் வெற்றிப் பெற்று தற்போது எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.
கூட்டணி முடிவு ஆகாத நிலையில் இப்போது மீண்டும் உழவர்கரை தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. “இந்த முறை நிச்சயம்” என்ற நம்பிக்கையுடன் என்.ஆர்.காங். உழவர்கரையில் நிற்க தயாராகி விட்டது. பன்னீர்செல்வம் ஏற்கனவே களப்பணியில் தீவிரம் காட்டி வர, இன்னொரு பக்கம் என்.ஆர்.காங்., கட்சிப் பிரமுகர் நாராயணசாமியும் சீட்டு கனவுடன் பம்பரமாகச் சுழல்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக நலத்திட்டங்கள் மழையாகப் பொழிந்து வருகிறார்.
இந்தச் சமயத்தில் பா.ஜ.,வும் உழவர்கரை தொகுதியை குறிவைத்து, தாமரையை விதைக்கத் தொடங்கிவிட்டது. அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளரான பா.ஜ., செயலாளர் சரவணன், வீடு வீடாகச் சென்று, நலத்திட்டங்களை வழங்கி, ஓட்டு சேகரித்து வருகிறார். இதனால் “இந்த முறை உழவர்கரை தாமரைக்கே” என்ற நம்பிக்கையுடன் அந்தொகுதியின் பா.ஜ. நிர்வாகிகள் உற்சாகமாக களம் கண்டு தீவிர ஓட்டு சேகரித்து வருகின்றனர். இதனால், எப்போதும் என்.ஆர்.காங்., வசமிருந்த உழவர்கரை, இம்முறை தாமரைக்கா.. அல்லது ஜக்குக்கா என உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

