ADDED : டிச 15, 2024 05:55 AM
நோணாங்குப்பம் படகு குழாமில், இரண்டாவது நாளாக படகு சவாரி நிறுத்தப்பட்டது.
தொடர் மழையால், வீடூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால், கடந்த 2ம் தேதி, நோணாங்குப்பம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. படகு குழாமில் நிறுத்தி வைத்திருந்த 5 படகுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. ஒரு படகு மரக்காணம் அருகே கண்டு பிடிக்கபட்டது. மற்ற 4 படகுகள் மாயமானது.
வெள்ளத்தில், பாரடைஸ் பீச்சில் இருந்த ஜெட்டி, குடில்கள், கீற்று குடைகள் அடித்து செல்லப்பட்டன. படகு குழாம் ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக, படகு சவாரி மட்டும் இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், வீடூர் அணையில் இருந்து சமீபத்தில் திறக்கப்பட்ட உபரி நீர், சங்கராபரணி ஆறு வழியாக, நோணாங்குப்பம் ஆற்றில் செல்வதால், நேற்று இரண்டாவது நாளாக, படகு சவாரி நிறுத்தப்பட்டது.
வார விடுமுறை நாட்களில், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் படகு குழாமில் குவிந்து வரும் நிலையில், படகு சவாரி இல்லாமல், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.