ADDED : ஆக 30, 2025 07:05 AM
சிதம்பரம் : சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லுாரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ளது, இக்கல்லுாரியின் லேண்ட் லைன் தொலைப்பேசிக்கு, நேற்று முன்தினம் காலை வந்த அழைப்பில் மர்ம நபர் ஒருவர் பேசினார்.
அதில், கல்லுாரியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி தொடர்பை துண்டித்தார். அதனைத் தொடர்ந்து, கடலுாரில் இருந்து மோப்ப நாய் உதவியுடன், வெடிகுண்டு நிபுணர்கள் 10க்கும் மேற்பட்டோர், கல்லுாரிக்கு விரைந்து சென்று, பல்வேறு பகுதியில் சோதனை மேற்கொண்டனர். ஆனால், வெடிகுண்டு கண்டெடுக்கப்படவில்லை.
இது குறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக போனில் அழைப்பு விடுத்த மர்ம நபர் குறித்து, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திடம், விளக்கம் கேட்டுள்ளனர்.
பி.எஸ்.என்.எல்., அழைப்புகள் குறித்து, ைஹதராபாத்தில் உள்ள சர்வரில் இருந்து விபரம் தெரியவேண்டி உள்ளதால். இன்னும் 2 தினங்களில் மர்ம நபர் குறித்த விபரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
