UPDATED : ஜூன் 21, 2026 07:10 PM
ADDED : ஜூன் 21, 2026 06:50 PM
அரியாங்குப்பம்: கேபிள் புதைக்க தோண்டப்பட்ட இடத்தில் ஏற்பட்ட பள்ளத்தை முறையாக மூடாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது.
கடலுார் சாலையில் நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு பாலம் வழியாக தவளக்குப்பம் பகுதிக்கு மொபைல் டவருக்கு செல்லும் கேபிள் சாலையோரத்தில் புதைக்கப்பட்டுள்ளது. இந்த கேபிள் ஆற்றுப் பாலத்தின் பக்க வாட்டு சுவர் வழியாக செல்கிறது. பாலத்தை தொடர்ந்து கேபிளை தரையில் பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டுள்ளது.
பாலம் முடியும் இடமான, கடலுார் மார்க்கத்தில் கேபிள் புதைக்கப்பட்ட இடத்தில் சரியான முறையில் மண் கொட்டி மூடாமல் உள்ளதால், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் பள்ளம் விழுந்துள்ளது. அந்த பகுதி சாலை குறுகியதாக இருப்பதால், இரவு நேரங்களில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் பள்ளம் தெரியாமல் இறங்கினால் கீழே விழுந்து பெரிய விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது.
எனவே கேபிளுக்கு பள்ளம் தோண்டிய நிர்வாத்தினர் உடனடியாக பள்ளத்தை மண் கொட்டி சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
