ஓட்டுச்சாவடியில் மொபைல் போன் பயன்படுத்திய வாலிபர் மீது வழக்கு
ஓட்டுச்சாவடியில் மொபைல் போன் பயன்படுத்திய வாலிபர் மீது வழக்கு
ADDED : ஏப் 10, 2026 11:10 PM
பாகூர்: ஓட்டுச்சாவடியில் தடையை மீறி மொபைல் போன் பயன்படுத்திய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. ஓட்டுச்சாவடியில் மொபைல் போன் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்து இருந்தது. இருப்பினும், வாக்காளர்கள் கொண்டு சென்ற மொபைல் போன்களை, ஓட்டுச்சாவடி ஊழியர்கள் பாதுகாத்து, திருப்பி ஒப்படைத்தனர்.
இந்நிலையில், ஏம்பலம் தொகுதி சேலியமேடு அரசு தொடக்கப்பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடியில், சேலியமேடு பேட் பகுதியை சேர்ந்த கபில்ராஜ் என்பவர் தடையை மீறி செல்போனை பயன்படுத்தி, காங்., கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து, ஓட்டு சேகரித்தார்.
அது தொடர்பான வீடியோ மற்றும், போட்டோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இது குறித்த தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் சென்றது. இதையடுத்து, ஏம்பலம், தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி முகமது இஸ்மாயில், இது குறித்து பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், ஓட்டுச்சாவடியில் தடையை மீறி மொபைல் போன் பயன்படுத்திய கபில்ராஜ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.
