கூரியர் ஊழியரை தாக்கிய 8 பேர் மீது வழக்குப் பதிவு
கூரியர் ஊழியரை தாக்கிய 8 பேர் மீது வழக்குப் பதிவு
ADDED : ஏப் 26, 2026 08:36 PM
புதுச்சேரி: கூரியர் நிறுவன ஊழியர் மற்றும் அவரது நண்பரை தாக்கிய 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
பெரியகாலாப்பட்டு, பூங்காவனம் செட்டியார் தெருவை சேர்ந்தவர் பிரவின், 27; தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 24ம் தேதி இரவு கணபதிசெட்டிகுளம் தனியார் மருத்துவமனை அருகேயுள்ள டீ கடையில் தனது நண்பர் லபின் என்பவருடன் நின்றிருந்தார். அங்கிருந்த வானுார், கொழுவாரியை சேர்ந்த ஜோஷூவா, சின்னகாலாப்பட்டு தினேஷ் ஆகியோருக்கும், பிரவினுக்கும் இடையே முன்விரோதம் காரணமாக வாய்த் தகராறு ஏற்பட்டது.
தினேஷ் அளித்த தகவலின் பேரில், அங்கு வந்த சின்ன காலாப்பட்டு கவுதம், பிள்ளைச்சாவடி பிரபாகரன், அரியாங்குப்பம் தாமஸ், ஸ்ரீகாந்த், சின்ன கொழுவாரி சந்துரு, ஜீவா ஆகியோர் பிரவின் மற்றும் லபினை திட்டி, உருட்டு கட்டை மற்றும் கூல்ட்ரிங்ஸ் பாட்டிலால் தாக்கினர்.
பிரவின் கையில் வைத்திருந்த பவர் பேங், டேட்டா கேபிள், ரூ. 200 ரொக்கம் ஆகியவற்றையும் பறித்து கொண்டு, கொலை மிரட்டல் விடுத்தனர்.
பிரவின் புகாரின் பேரில், ஜோஷூவா, தினேஷ், கவுதம், பிரபாகரன், தாமஸ், ஸ்ரீகாந்த், சந்துரு, ஜீவா ஆகியோர் மீது காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
