மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு கவர்னர் கைலாஷ்நாதன் அட்வைஸ்
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு கவர்னர் கைலாஷ்நாதன் அட்வைஸ்
ADDED : மே 20, 2026 04:32 AM
புதுச்சேரி: மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு என கவர்வர் கைலாஷ்நாதன் தெரிவித்துள்ளார்.
லோக் நிவாசில் கவர்னர் கைலாஷ்நாதன் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோவில் கூறியதாவது: மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது நாட்டின் வளர்ச்சிக்கும், திட்டம் உருவாக்குவதற்கும் மிகவும் அடிப்படையானது. ஒரு நாட்டில் எத்தனை மக்கள் வாழ்கிறார்கள் அவர்களுடைய கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டு வசதி, சமூக பொருளாதார முன்னேற்றம் போன்றவற்றவைகளை அரசு துள்ளியமாக அறிந்துகொள்ள உதவும் மிகப்பெரிய ஜனநாயக நடவடிக்கை. 2027ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை இந்திய அரசு நவீன தொழில்நுட்ப வசதியுடன், சுய கணக்கெடுப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் பொதுமக்கள் தங்களுடைய குடும்ப விபரங்களை தாங்களே ஆன்லைனில், மொபைல் மூலம் பதிவு செய்யலாம். மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது அரசாங்கத்தின் வேலை மட்டும் இல்லை. ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு. நாம் வழங்கும் தகவலின் அடிப்டையில் தான் எதிர்காலத்தில் பள்ளிகள், மருத்துவமனைகள், சாலை, குடிநீர், வீட்டு வசதிகள், வேலைவாய்ப்பு போன்றவை திட்டமிடப்படும்.எனவே இந்த கணக்கெடுப்பில் ஒவ்வொரு குடும்பமும் முழுமையாக சரியான தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.
இளைஞர்கள், மாணவர்கள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சமூக அமைப்புகள் மகளிர் குழுக்கள் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக கிராமப்புறங்களில் தொழில்நுட்ப வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களும் சுய கணக்கெடுப்பில் பங்கேற்க உதவ வேண்டும். இதை நம்முடைய கடமையாக நினைத்து செயல்பட வேண்டும். பொதுமக்கள் அனைவரும் அரசாங்க அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
