சென்டாக் நர்சிங் படிப்பிற்கு நுழைவு தேர்வு முடிவு வெளியீடு 87 மதிப்பெண் பெற்று மாணவர் முதலிடம்
சென்டாக் நர்சிங் படிப்பிற்கு நுழைவு தேர்வு முடிவு வெளியீடு 87 மதிப்பெண் பெற்று மாணவர் முதலிடம்
ADDED : ஜூலை 09, 2026 03:12 AM
புதுச்சேரி: சென்டாக் நர்சிங் பொது நுழைவு தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர் தாஷின் 87 மதிப்பெண் பெற்று, மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.
நாடு முழுதும் நர்சிங் படிப்பில் சேர நீட் மதிப்பெண் அவசியம். ஆனால், புதுச்சேரியில் நீட் மதிப்பெண்ணிற்கு பதிலாக சுகாதார துறை வாயிலாக பொது நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.
அந்த மதிப்பெண் அடிப்படையில் நர்சிங் மாணவர் சேர்க்கை சென்டாக் மூலம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்தாண்டு அரசு இட ஒதுக்கீடான 558 இடங்களுக்கான சென்டாக் நர்சிங் பொது நுழைவு தேர்விற்கு மொத்தம் 2,313 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான தேர்வு கடந்த 5ம் தேதி புதுச்சேரியில் 5 மையங்கள் உட்பட மாநிலம் முழுதும் 9 மையங்களில் நடந்தது.
இத்தேர்விற்கு விண்ணப்பித்தவர்களில் 1,557 மாணவிகள் உட்பட 2,014 பேர் தேர்வு எழுதினர். 299 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. மொத்தம் 100 மதிப்பெணணிற்கு தேர்வு நடந்தது.
இத்தேர்வின் முடிவுகள் https://www.centacpuducherry.in இணையதளத்தில் நேற்று வெளியானது. இதில் மாணவர் தாஷின் 87 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். மாணவி தீபா 86 மதிப்பெண் பெற்று 2ம் இடத்தையும், மாணவர் சாய்பிரசன்னா 83 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர். மேலும், தேர்வில் பங்கேற்ற 2014 மாணவர்களின் மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
இத்தகவலை சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேள் தெரிவித்துள்ளார்.
