சென்டாக் முதுநிலை பல் மருத்துவப் படிப்பு சேர்க்கை முதற்கட்ட வரைவு சீட் ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியீடு
சென்டாக் முதுநிலை பல் மருத்துவப் படிப்பு சேர்க்கை முதற்கட்ட வரைவு சீட் ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியீடு
ADDED : செப் 06, 2026 06:12 PM
புதுச்சேரி: எம்.டி.எஸ்., முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட வரைவு சீட் ஒதுக்கீட்டுப் பட்டியலை சென்டாக் வெளியிட்டுள்ளது.
விண்ணப்பித்த மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களின் விவரங்கள் மற்றும் சேர்க்கை நிலையை அறிய, சென்டாக்கின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.centacpuducherry.in பக்கத்திற்குச் சென்று, தங்களின் டேஷ்போர்டை பயன்படுத்தி லாகின் செய்து சரிபார்த்துக் கொள்ளலாம். இது தொடர்பான தகவல்கள் மாணவர்கள் பதிவு செய்த மொபைல் எண்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலமாகவும் அனுப்பப்பட்டுள்ளன.
ஆட்சேபனைகள்:: வெளியிடப்பட்டுள்ள வரைவு சீட் ஒதுக்கீடு பட்டியலில் ஏதேனும் பிழைகள், ஆட்சேபனைகள் அல்லது புகார்கள் இருக்கும் பட்சத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களின் லாகின் பக்கத்தில் உள்ள கிரீவன்ஸ் என்ற பிரத்யேக வசதியைப் பயன்படுத்திப் புகார்களைப் பதிவு செய்யலாம்.
புகார்களைச் சமர்ப்பிக்க இன்று 7ம் தேதி காலை 11:00 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பெறப்படும் ஆட்சேபனைகள் அனைத்தும் முறைப்படி பரிசீலிக்கப்பட்டுத் தீர்க்கப்பட்ட பின்னரே முதற்கட்ட இறுதித் தற்காலிக ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியிடப்படும்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு ஒதுக்கீட்டுப் பட்டியல் ஒரு வழிகாட்டி மட்டுமே. இது மாற்றத்திற்கு உட்பட்டது. இந்த வரைவுப் பட்டியலின் அடிப்படையில் எந்தவொரு விண்ணப்பதாரரும் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தின் மீது முழு உரிமை கோர முடியாது. இந்த வரைவுப் பட்டியலை நீதிமன்றங்களில் சவாலுக்கு உட்படுத்த முடியாது என, சென்டாக் தெரிவித்துள்ளது.
கல்லுாரியில் சேரும் முறை:: இறுதித் தற்காலிக ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியிடப்பட்டதும், தங்களின் லாகின் டேஷ்போர்டு மூலம் தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையைத் பதிவிறக்கம் செய்த பின்னரே, விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லுாரிகளை அணுக வேண்டும்.
சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு மாணவர்கள் www.centacpuducherry.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது தங்களின் லாகின் டாஷ்போர்டில் உள்ள கிரீவன்ஸ் வசதியைப் பயன்படுத்தலாம்.
மேலும், 0413-2655570 அல்லது 0413-2655571 ஆகிய உதவி மைய எண்களைத் தொடர்பு கொண்டும் தகவல்களைப் பெறலாம்.
