கவுரவ ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய மத்திய கூட்டமைப்பு வலியுறுத்தல்
கவுரவ ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய மத்திய கூட்டமைப்பு வலியுறுத்தல்
ADDED : ஏப் 07, 2025 06:17 AM
புதுச்சேரி; புதுச்சேரி மாநில ஆசிரியர் கூட்டமைப்பின், உயர்மட்ட செயற்குழு கூட்டம், அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு அலுவலகத்தில் நடந்தது.கவுரவத் தலைவர் லட்சுமணசுவாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்,கூட்டமைப்பு தலைவர் சீனிவாசன், ஒருங்கிணைப்பு செயலாளர் பிரபாகரன், பொது செயலாளர் விஜயகுமார் ஆகியோர் அளித்த பேட்டி:
புதுச்சேரி அரசு கல்வித்துறையில் நிரந்தர பணியிடங்கள் இருந்தும், நிரந்தர பணி அல்லாமல் தற்காலிக ஆசிரியர்களாகவே கவுரவ ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். 3 முதல் 5 ஆண்டுகள் வரை அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் கவுரவ ஆசிரியர்கள், சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் பணி நிரந்தரம் செய்யப்படுவர்என அறிவிக்கப்பட்டது.
ஆனால், அவசரகதியாக 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இத்தனை ஆண்டுகள் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சிக்கு உதவி வந்த ஆசிரியர்களை எவ்வித முன்னறிவிப்புமின்றி பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனை புதுச்சேரி மாநில ஆசிரியர் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.
எனவே, பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட கவுரவ ஆசிரியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வழிவகை செய்ய வேண்டும்' என்றனர்.
