UPDATED : மே 01, 2026 07:18 PM
ADDED : மே 01, 2026 07:11 PM

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் அம்மன் கோவிலில் நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் தேரை இழுத்து தரிசனம் செய்தனர்.
கோவிலில் 112ம் ஆண்டு செடல் தேர் திருவிழா, கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து, 24ம் தேதி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இந்திர விமானத்தில் அம்மன் வீதியுலா, தீபாரதனை நடந்தது.
தொடர்ந்து, 25ம் தேதி முதல் 30ம் தேதி வரை அம்மன், காமதேனு என பல்வேறு வாகனங்களில் வீதியுலா மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை முதல்வர் ரங்கசாமி வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்து, அம்மனை தரிசனம் செய்தார். விழாவில், ஏளானமானோர் தேரை இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இவ்விழாவையொட்டி, மாதா கோவில் தெருவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேர் முக்கிய வீதிகளில் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அதன் பின் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாரதனை நடந்தது. நாளை (2ம் தேதி) காலை மஞ்சள் நீராட்டு விழா, இரவு 10:00 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது. வரும் 8ம் தேதி இரவு 7:00 மணிக்கு அம்மன் உஞ்சல் உற்சவம் நடக்கிறது.
