/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிகிச்சையின்போது புதுச்சேரி வாலிபர் இறந்த வழக்கு சென்னை டாக்டர்களின் பதிவு மூன்று மாதத்திற்கு ரத்து
/
சிகிச்சையின்போது புதுச்சேரி வாலிபர் இறந்த வழக்கு சென்னை டாக்டர்களின் பதிவு மூன்று மாதத்திற்கு ரத்து
சிகிச்சையின்போது புதுச்சேரி வாலிபர் இறந்த வழக்கு சென்னை டாக்டர்களின் பதிவு மூன்று மாதத்திற்கு ரத்து
சிகிச்சையின்போது புதுச்சேரி வாலிபர் இறந்த வழக்கு சென்னை டாக்டர்களின் பதிவு மூன்று மாதத்திற்கு ரத்து
ADDED : செப் 30, 2025 07:57 AM
புதுச்சேரி : உடல் பருமன் சிகிச்சையின்போது புதுச்சேரி வாலிபர் இறந்த விவகாரத்தில் 2 டாக்டர்களில் மருத்துவ பதிவினை 3 மாத காலத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி திருவள்ளுவர் நகர், புதுப்பாளையம் தெருவை சேர்ந்தவர் செல்வநாதன். இவரது மகன் ஹேமச்சந்திரன் 26, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். 150 கிலோ எடையுடைய ஹேமச்சந்திரன் உடல் பருமன் காரணமாக நாளுக்குநாள் அவதியுற்று வந்துள்ளார்.
போலீசில் புகார் இதனிடையே, யூடியூப்பில் வந்த விளம்பரத்தை பார்த்து, உடல் எடையை குறைப்பதற்காக சிகிச்சை மேற்கொள்வதற்காக, பல்லாவரம் அடுத்த பம்மலில் உள்ள பி. பி. ஜெயின் மருத்துவமனையை அணுகினார். அந்த, மருத்துவமனையில் உடல் பருமனை குறைப்பதற்காக, கடந்தாண்டு ஏப்ரல் 22ம் தேதி ஹேமச்சந்திரனுக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது, ஹேமச்சந்திரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மேல்சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த ஹேமச்சந்திரன் மறுநாள் 23ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஹேமச்சந்திரனின் பெற்றோர், தங்களது மகனுக்கு தவறான சிகிச்சை அளித்த பி.பி.ஜெயின் மருத்துவமனை மீது பம்மல் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அறிக்கை தாக்கல் மேலும் இதுகுறித்து தமிழ்நாடு முதல்வரிடமும் புகார் அளித்தனர். அதன்பேரில், முதல்வர் ஸ்டாலின், தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தி பம்மல் பி. பி. ஜெயின் மருத்துவமனையை ஆய்வு செய்து உடல் பருமன் அறுவை சிகிச்சை போன்ற உயர் தர அறுவை சிகிச்சை செய்வதற்கு அந்த மருத்துவமனையின் அறுவை சிகிச்சை கூடம் தகுதியற்றது , அறுவை சிகிச்சையின் போது இதய நோய் மருத்துவர், மயக்கமருந்து வல்லுநர், பயிற்சி பெற்ற செவிலியர்கள் யாரும் இல்லை என்று கண்டறிந்து,மருத்துவமனையின் லைசன்சை ரத்து செய்து மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். அலட்சியமாக செயல்பட்ட டாக்டர் பெருங்கோ மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தனர்.
மருத்துவ கவுன்சிலில் புகார் மேலும் அலட்சியமாகவும், அஜாக்கிரதையாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு தனது மகன் இறப்பிற்கு காரணமான டாக்டர் பெருங்கோ மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ் நாடு மருத்துவ கவுன்சிலில் புகார் அளித்தார். அந்த புகார் குறித்து டாக்டர் பெருங்கோ மற்றும் மயக்கவியல் மருத்துவர் நேசமணி ஆகியோரிடம் விளக்கங்கள் பெற்று அதனை உயர் மருத்துவ வல்லுநர் குழுவினர் கருத்தறிய அனுப்பியது.
மருத்துவ பதிவு ரத்து உயர் மருத்துவ வல்லுநர் குழுவினர் உடல் பருமன், சர்க்கரை நோய் கட்டுபாட்டிற்குள் இல்லாத ஒரு நோயாளிக்கு அவசர அவசரமாக இந்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மயக்க மருந்து முறையாக செலுத்தப்படாதால் மூச்சு திணறல், இதயதுடிப்பு பாதிப்பு, மாரடைப்பு போன்றவைகள் ஏற்பட்டு, பல உறுப்புகள் செயலிழக்க தொடங்கியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் மயக்கவியல் மருந்து நிபுணர் இருவரின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவு தான் ஹேமசந்திரன் இறப்பிற்கு காரணம் என்று தெரிவித்தனர்.
உயர்மருத்துவ வல்லுநர் குழுவின் கருத்துக்கள் தமிழ் நாடு மருத்துவ கவுன்சில் ஒழங்கு நடவடிக்கை குழு கூடி விவாதித்து அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் டாக்டர் பெருங்கோ மற்றும் மயக்கவியல் மருத்துவ நிபுணர் நேசமணி ஆகிய இருவரின் மருத்துவப் பதிவை மூன்று மாத காலத்திற்கு ரத்து செய்து கடந்த 18ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது.