ADDED : ஜூலை 08, 2026 01:56 AM
புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டனுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியை சேர்ந்தவர் பிரபல ரவுடி மர்டர் மணிகண்டன், 48. இவர் மீது புதுச்சேரியில் உள்ள பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் கொலை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இதில், சில வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, கடந்த 2000ம் ஆண்டு முதல், 26 ஆண்டுகளாக காலாப்பட்டு மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டார்.
பின், அங்கு நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் காரணமாக தற்போது அவர் ஏனாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரது மனைவி,மகனுக்கு உடல்நிலை சரியில்லாததால் ஒரு மாதம் பரோல் கேட்டு, சிறை நிர்வாகத்திடம் முறையிட்டார்.
ஆனால், அவர் மீது சில வழக்குகள் நிலுவையில் உள்ளதால், பரோல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவரது மனைவி, மணிகண்டனுக்கு பரோல் கேட்டு, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, மணிகண்டனுக்கு போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் (6ம் தேதி) முதல் வரும் 20ம் தேதி வரை 15 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டார்.
