ADDED : நவ 04, 2024 06:30 AM

திருபுவனை : தென் ஆப்ரிக்காவில் நடந்த காமன்வெல்த் பவர் லிப்டிங் (வளு துாக்கும்) சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற புதுச்சேரி அரசுக் கல்லுாரி மாணவர் விஷாலுக்கு முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயகம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
காமன்வெல்த் பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டி தென் ஆப்ரிக்காவில் கடந்த அக்.,3ம் தேதி தொடங்கி 13ம் தேதிவரைநடந்தது. இதில் சிறப்பு பிரிவில் 45 நாடுகளை சேர்ந்த சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டனர். இந்தியாவின் சார்பில் புதுச்சேரி, கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கலைக்கல்லுாரியின் பி.பி.ஏ., (சுற்றுலாத்துறை) முதலாம் ஆண்டு மாணவர் விஷால் மற்றும் நடுவராக அவரது பயிற்சியாளர் பாக்கியராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
59 கிலோ எடை பிரிவில் விஷால்தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் விஷால் மற்றும் அவரது பயிற்சியாளர் பாக்கியராஜ் ஆகியோரை பாராட்டினர்.
