/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்காமல் பா.ஜ.,வை திணறவிடும் முதல்வர் ரங்கசாமி
/
கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்காமல் பா.ஜ.,வை திணறவிடும் முதல்வர் ரங்கசாமி
கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்காமல் பா.ஜ.,வை திணறவிடும் முதல்வர் ரங்கசாமி
கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்காமல் பா.ஜ.,வை திணறவிடும் முதல்வர் ரங்கசாமி
ADDED : பிப் 01, 2026 05:08 AM
கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணியுடன் என்.ஆர்.காங்., வெற்றி பெற்று முதல்வராக ரங்கசாமி பதவி வகித்து வருகிறார். வரும் சட்டசபை தேர்தலில் இதே கூட்டணி நீடிக்க பா.ஜ., தலைமை ஆர்வம் காட்டி வருகிறது.
இந்த கூட்டணியில் சார்லஸ் மார்ட்டினின் லட்சிய ஜனநாயக கட்சியும் கூட்டணி அமைக்க உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பல மாதங்களுக்கு முன்பே கூட்டணியை உறுதி செய்து வேட்பாளர்களை தயார் செய்யும் பணியில் பா.ஜ., தலைமை இருக்கும் நிலையில், புதுச்சேரியில் கூட்டணியில் உள்ள முதல்வர் ரங்கசாமியிடம் கூட்டணி மற்றும் போட்டியிடும் தொகுதிகள் குறித்து பேச பலமுறை பா.ஜ., தலைமை முயற்சித்தும், இதுவரை முதல்வர் ரங்கசாமி பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் பல மாதங்களாக ஆட்டம் காட்டி வருகிறார்.
முதல்வர் ரங்கசாமியின் மருமகனான பா.ஜ., அமைச்சர் நமச்சிவாயமே முயற்சித்தும் எந்த பயனும் இல்லை.
தமிழகத்தில் சேர்க்கவே மாட்டேன் என்று அடம் பிடித்த பழனிசாமியை வழிக்கு கொண்டு வந்து தினகரனை அ.தி.மு.க.,வில் சேர்த்தது மட்டுமின்றி, பல மாநிலங்களில் கூட்டணி மற்றும் கூட்டணியில் இல்லாத அசகாய தலைவர்களை எல்லாம் தனது கைப்பிடியில் வைத்திருக்கும் பா.ஜ., தலைமை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்க முடியாமல் கடும் எரிச்சலில் மவுனம் காத்து வருகிறது.
முதல்வரிடம் பேச சென்ற சுரானா, சந்தோஷ்ஜி உள்ளிட்ட அனைத்து இரண்டாம் கட்ட தலைவர்களிடம் கூட்டணி குறித்து பேச மாட்டேன் என்றும், கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றால் ஒன்று மத்திய அமைச்சர் அமித்ஷா, இல்லை பிரதமர் மோடியிடம் மட்டும் தான் பேசுவேன் என தெளிவாக முதல்வர் ரங்கசாமி கூறிவிட்டார்.
இதற்கு காரணம் வரும் சட்டசபை தேர்தலில் 17 இடங்களில் என்.ஆர். காங்., போட்டியிட திட்டமிட்டுள்ளது. மேலும் கூடுதலாக நியமன எம்.எல்.ஏ.,க்கள் பதவி 2ம் வேண்டும், இதற்கு உறுதி அளித்தால் மட்டுமே அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் என, முதல்வர் தரப்பிலிருந்து திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் இந்த சீட்டு உடன்படிக்கைக்கு இரண்டாம் கட்ட தலைவர்களால் உறுதி அளிக்க முடியாது என்பதால், அமித்ஷா, மோடியிடம் மட்டுமே பேசுவேன் என, முதல்வர் கூறியுள்ளதாக என்.ஆர்.காங்., வட்டாரத்தில் கூறப்படுகிறது.
கூட்டணிப் பேச்சுவார்த்தையை விரைவில் முடிவுக்கு கொண்டு வர புதுச்சேரிக்கு அடுத்த மாதம் அமித்ஷா வருகிறார்.
பேச்சுவார்த்தை முடிந்த பின், புதுச்சேரிக்கு வரும் பிரதமர் மோடியுடன் முதல்வர் ரங்கசாமி மேடை ஏறுவார் எனத் தெரிகிறது.

