/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு கவர்னர் துவக்கி வைப்பு
/
கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு கவர்னர் துவக்கி வைப்பு
ADDED : நவ 03, 2024 04:17 AM

புதுச்சேரி : புதுச்சேரியில், கிறிஸ்துமஸ் 'கேக்' பழக்கலவை தயாரிப்பு நிகழ்ச்சியை, கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார்.
புதுச்சேரி, அக்கார்டு ஓட்டலில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவிற்கு 'கேக்' தயாரிப்பதற்கான பழக்கலவை தயாரிப்பு பணி நேற்று மாலை துவங்கியது. இப்பணியை, கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து 'கேக்' தயாரிப்பதற்கான முந்திரி, பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை, பேரிச்சம்பழம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட 120 கிலோ பழங்களுடன், 60 லிட்டர் மதுவகைகள் ஊற்றி கலக்கப்பட்டன.
நிகழ்ச்சியில், புதுச்சேரி பல்கலை துணைவேந்தர் தரணிக்கரசு, அலையான்ஸ் பிரான்சிஸ் கல்வி நிறுவன இயக்குனர் ஜாலி கூஸ், தலைவர் நல்லாம்சதீஷ், அக்கார்டு தலைமை செயல் அதிகாரி வெங்கடேஷ் பட், துணைத் தலைவர் வைரக்குமார், திட்ட மேலாளர் இளவரசு, மேலாளர்கள் ஆனந்து, இம்ரான்கான், 'செப்' குமாரகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி குறித்து, அக்கார்டு ஊழியர்கள் கூறியதாவது:
ஐரோப்பிய நாடுகளில், கி.பி.18 நுாற்றாண்டில் 'கேக்' பழக்கலவை தயாரிப்பு விழா துவங்கியது. தொடர்ந்து, அனைத்து நாடுகளிலும் பரவி, தற்போது சர்வதேச அளவில் நடைபெற்று வருகிறது.
ஆரம்ப காலங்களில், வீடுகளில் 'கேக்' பழக்கலவை தயாரிக்கும் போது, உலர் பழங்கள், பருப்பு வகைகளுடன், ஒயின் நன்றாக கலக்க வேண்டும் என்பதற்காக, முதியோர்கள், அதில் தங்கக்காசை ஒளித்து வைத்து விடுவர். அதை தேடி கண்டுபிடிப்பவர்களுக்கு, பரிசுகள் வழங்குவர். அதை நினைவூட்டும் வகையில் இன்றைய நிகழ்ச்சியில் நடந்தது.
தற்போது உருவாக்கப்பட்டுள்ள பழக்கலவை, 45 நாட்கள் ஊற வைக்கப்படும். பின்னர், மைதா உள்ளிட்ட பொருட்களை கொண்டு, கேக் தயாரிக்கப்படும். இந்த கேக், வரும் கிறிஸ்துமஸ், புத்தாண்டிற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும் என்றனர்.