/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சினிமா இயக்குனர் அமைச்சருடன் சந்திப்பு
/
சினிமா இயக்குனர் அமைச்சருடன் சந்திப்பு
ADDED : டிச 12, 2024 06:10 AM
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் அமைச்சர் லட்சுமி நாராயணனை, சினிமா இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று சந்தித்து பேசினார்.
சினிமா இயக்குனரும், நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் நேற்று மாலை புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்து பேசினார்.
அதில், புதுச்சேரி கடற்கரை சாலையில் அரசு சுற்றுலா துறை மூலம் இயங்கி வரும் சிகல்ஸ் ஓட்டலை, தான் நடத்துவதற்கு அனுமதி கிடைக்குமா என, கேட்டார். அதற்கு, அமைச்சர் சிகல்ஸ் ஓட்டல் அரசுக்கு சொந்தமானது. தற்போது நல்ல நிலையில் லாபத்துடன் இயங்கி வருவதால், அதனை தனியாரிடம் ஒப்படைக்க முடியாது என, தெரிவித்தார்.
பின்னர், புதுச்சேரி கடற்கரைகள் ஏதேனும் ஒன்றை ஒப்பந்த அடிப்படையில் வழங்குமாறு கேட்டுள்ளார். அதற்கும், ஈடன், மெரினா உள்ளிட்ட கடற்கரைகள், ஒப்பந்த அடிப்படையில் கடந்த 2017 ம் ஆண்டே தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக அமைச்சர் தெரிவித்தார். புதுச்சேரியில் பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏதேனும் இடம் உள்ளதா என விக்னேஷ் சிவன் கேட்டதற்கு, பழைய துறைமுக வளாகத்தில் 4 ஆயிரம் பேர் அமரும் வகையில் திறந்தவெளி பொழுதுபோக்கு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்திற்கான வரியினை நகராட்சியிடம் செலுத்தி, கலை நிகழ்ச்சிகளை நடத்தி கொள்ளலாம் என, அமைச்சர் தெரிவித்தார்.
இதையடுத்து, இயக்குனர் விக்னேஷ் சிவன், சட்டசபை வளாகத்தில் இருந்து, பழைய துறைமுக வளாகத்திற்கு சென்று, திறந்தவெளி மைதானத்தை பார்வையிட்டு, பின்னர் சென்னை புறப்பட்டு சென்றார்.

