/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சி.பி.ஐ., அதிகாரி என கூறி நூதன மோசடி; தொழிலதிபரிடம் பணம் பறிக்க முயற்சி
/
சி.பி.ஐ., அதிகாரி என கூறி நூதன மோசடி; தொழிலதிபரிடம் பணம் பறிக்க முயற்சி
சி.பி.ஐ., அதிகாரி என கூறி நூதன மோசடி; தொழிலதிபரிடம் பணம் பறிக்க முயற்சி
சி.பி.ஐ., அதிகாரி என கூறி நூதன மோசடி; தொழிலதிபரிடம் பணம் பறிக்க முயற்சி
ADDED : மார் 13, 2024 06:52 AM
புதுச்சேரி : புதுச்சேரி பா.ஜ.,வை சேர்ந்த தொழிலதிபரிடம், சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்துள்ளதாக கூறி பணம் பறிக்க முயன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.
புதுச்சேரியில் விதவிதமாக சைபர் கிரைம் மோசடிகள் தினந்தோறும் அரங்கேறி வருகிறது. இந்த வரிசையில் தற்போது புது வகை மோசடி துவங்கி உள்ளது. வெளிநாடுகளில் வசிப்போருக்கு புதுச்சேரியில் இருந்து செல்லும் பார்சல்களில் உள்ள முகவரி விபரங்களை சேகரித்து கொள்ளும் சைபர் கிரைம் மோசடி கும்பல், சி.பி.ஐ., அதிகாரிகள் போல் பேசி மோசடியில் இறங்கி உள்ளது.
லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் தொழிலதிபர் தண்டபாணி. உழவர்கரை மாவட்ட பா.ஜ., தலைவராக உள்ளார். இவர், இ.சி.ஆரில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் தண்டபாணியை தொடர்பு கொண்ட மர்ம நபர், தான் சி.பி.ஐ., அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டார்.
'நீங்கள் தைவான் நாட்டிற்கு அனுப்பிய பார்சலில் போதை பொருள் இருந்தது. அதை கைப்பற்றி உள்ளோம். உங்கள் மீது வழக்குப் பதிவு செய்து, கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது' என பொய்யாக தெரிவித்துள்ளனர்.
மேலும், கடத்தல் மூலம் நீங்கள் எவ்வளவு பணம் பரிமாற்றம் செய்தீர்கள் என்ற தகவல் எங்களுக்கு தெரியும் என கூறி, கிரடிட் கார்டு, டெபிட் கார்டு பணபரிமாற்ற விபரங்களை கூறி உள்ளனர். உங்கள் வங்கி கணக்கு எண்ணின் கடைசி 3 நம்பர்களை கூறுங்கள் என மிரட்டல் தோணியில் கேட்டுள்ளனர்.
உடனே வேறு ஒரு நம்பர் கொடுத்து, ஸ்கைப் காலில் பேச வைத்துள்ளனர். அப்போது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்ததுபோல் எப்.ஐ.ஆர்., காப்பியை தண்டபாணிக்கு அனுப்பி வைத்தனர். தன் பெயரில் எப்.ஐ.ஆர். பதிவாகி இருப்பதை கண்டு தண்டபாணி அதிர்ச்சி அடைந்தார்.
கடைசியாக வங்கி கணக்கு விபரங்களை கேட்டபோது சந்தேகமடைந்த தண்டபாணி இணைப்பை துண்டித்தார். இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பா.ஜ., தொழிலதிபரிடம் சி.பி.ஐ., அதிகாரி போல் பேசி பணம் பறிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

