ADDED : ஏப் 10, 2026 07:51 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் ஓட்டுகள் பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 'ஸ்ட்ராங் ரூம்'களை பார்வையிட்ட கலெக்டர் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. அதில் புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 23 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மாலை 6 மணிக்கு மேல் சீல் வைத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் லாஸ்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணும் மையங்களான தாகூர் அரசு கல்லுாரி. மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுாரி மற்றும் மகளிர் பொறியியல் கல்லூரி ஆகிய மூன்று மையங்களில் பாதுகாப்பாக வைத்து அந்தந்த தொகுதி வேட்பாளர்கள் முன்னிலையில் 'சீல்' வைக்கப்பட்டன. தொடர்ந்து இந்த ஓட்டு எண்ணும் மையங்கள் மூன்றடுக்கில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த மையங்களை மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் குலோத்துங்கன் மற்றும் மத்திய பொது பார்வையாளரும் அங்கு அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி., கேமராக்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் விழிப்புடன் பணியாற்றுமாறு அறிவுறுத்தினர்.
மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்போடு, வெளிப்புற பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, கூடுதல் கலெக்டர் சுதாகர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உடனிருந்தனர்.
