பருவமழை முன்னெச்சரிக்கையாக படுகை அணைகளை கலெக்டர் ஆய்வு
பருவமழை முன்னெச்சரிக்கையாக படுகை அணைகளை கலெக்டர் ஆய்வு
ADDED : செப் 18, 2026 08:03 PM

புதுச்சேரி: சங்கராபரணி ஆற்றுப்பகுதிகளில் பருவமழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை துவங்குவதை முன்னிட்டு, கலெக்டர் குலோத்துங்கன், நேற்று சங்கராபரணி ஆற்றில் அமைந்துள்ள செல்லிப்பட்டு மற்றும் பிள்ளையார்குப்பம் படுகை அணைகளை ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது சப் கலெக்டர் குமரன், தாசில்தார், சர்வேயர், பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளர் மற்றும் இளநிலைப் பொறியாளர் உடனிருந்தனர். இதில் ஆற்றுப்பகுதிகளில் உள்ள ஆக்ரமிப்புகள் மற்றும் நீர்வழிப்பாதைகளின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டதுடன், மழைக்காலங்களில் சீரான நீரோட்டத்தை உறுதி செய்யும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பிள்ளையார்குப்பம் ஆத்துவாய்க்கால் பகுதியில் நடந்து வரும் துார்வாரும் பணிகளையும், கலெக்டர் ஆய்வு செய்தார். பருவமழைக்கு முன்பு பணிகளை விரைவாக முடித்து, மழைநீர் சீராக செல்லும் வகையில் ஆற்றுப் படுகை மற்றும் நீர்வழிப்பாதைகளை தயார் நிலையிலும், கரைகளை மேம்படுத்தவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பருவ மழையின் போது, வெள்ளப்பெருக்கு, மற்றும் நீர்த்தேக்கப் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க தேவையான மணல் மூட்டைகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை மற்றும் பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
