/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு
/
ஓட்டு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு
ADDED : ஏப் 29, 2026 04:41 AM
புதுச்சேரி: ஓட்டு எண்ணும் மையத்தில் மாவட் தேர்தல் அதிகாரியான கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு கடந்த 9ம் தேதி நடந்தது. புதுச்சேரி பிராந்தியத்தின் 23 தொகுதிகளில் ஓட்டுப் பதிவு செய்யப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி.பி.ஏ.டி., இயந்திரங்கள் லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லுாரி, மோதிலால் நேரு அரசு தொழில்நுட்பக் கல்லுாரி மற்றும் தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஆகிய மூன்று ஓட்டு எண்ணும் மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.
வரும் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கவுள்ளது.
இதையொட்டி, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர்குலோத்துங்கன் நேற்று ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு ஓட்டு எண்ணும் அறையிலும் தேவையான எண்ணிக்கையில் மேசைகள் மற்றும் தடுப்புக் கம்பிகள்அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தபால் ஓட்டுகள் எண்ணுவதற்கு தேவையான வசதிகள், தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணும் அறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான பிரத்யேக அறைகள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவற்றை தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி அமைக்க அறிவுறுத்தப்பட்டது.
ஓட்டு எண்ணும் மையத்திற்கு வரும் முகவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்திடவும், தீயணைப்புத் துறை மற்றும் மருத்துவக் குழுவினரின் தயார் நிலையில் வைத்திருக்கவும், மூன்றடுக்கு பாதுகாப்பு முறை மற்றும் சி.சி.டி.வி., கேமராக்கள் மூலம் 24 மணி நேர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும், ஓட்டு எண்ணும் மையத்தில் எவ்வித தொய்வுமின்றி, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி வெளிப்படையான முறையில் ஓட்டு எண்ணிக்கையை நடத்தி முடிப்பது குறித்தும் போலீஸ்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு உரிய ஆலோசனைகளை கலெக்டர் வழங்கினார்.
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் பொதுமக்களுக்கு தெரிவிக்க ஏதுவாக. உரிய வசதிகளுடன் கூடிய ஊடக மையம் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின் போது, சீனியர் எஸ்.பி.,க்கள் கலைவாணன்,நித்யா ராதாகிருஷ்ணன், எஸ்.பி., சுருதி யாரகட்டி,நோடல் அதிகாரி சுதாகர், ஊடக நோடல் அதிகாரி சுரேஷ்ராஜ் மற்றும் பல்வேறு அரசுத் துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

