ADDED : ஜன 07, 2024 05:11 AM
புதுச்சேரி: தனியார் பஸ் மோதி படுகாயமடைந்த கல்லுாரி மாணவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
வில்லியனுார் அடுத்த வி.மணவெளி, தண்டுகார வீதியை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் கணேஷ், 19; இவர், தனியார் கல்லுாரியில் விவசாயம் முதலாமாண்டு படித்தார்.
இவரது சகோதரி திரிபுரசுந்தரி, 21; மருத்துவம் படித்து முடித்து, காலாப்பட்டு தனியார் மருத்துவ கல்லுாரியில் பயிற்சி எடுத்து வருகிறார்.
கடந்த 4ம் தேதி திரிபுரசுந்தரியை பஸ் ஏற்றி விடுவதற்கு வீட்டில் இருந்து கணேஷ் மொபட்டில் அழைத்து சென்றார்.
மூலக்குளம் அருகே சென்றபோது, அவ்வழியாக வேகமாக சென்ற தனியார் பஸ், மொபட் மீது மோதியது. கணேஷ், திரிபுரசுந்தரி படுகாயமடைந்தனர்.
புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி கணேஷ் இறந்தார். திரிபுரசுந்தரி சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து, வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.