/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய அரசு பணியிடங்களுக்கு 2 கட்டமாக... போட்டி தேர்வு; மையங்களை இறுதி செய்யும் பணி தீவிரம்
/
புதிய அரசு பணியிடங்களுக்கு 2 கட்டமாக... போட்டி தேர்வு; மையங்களை இறுதி செய்யும் பணி தீவிரம்
புதிய அரசு பணியிடங்களுக்கு 2 கட்டமாக... போட்டி தேர்வு; மையங்களை இறுதி செய்யும் பணி தீவிரம்
புதிய அரசு பணியிடங்களுக்கு 2 கட்டமாக... போட்டி தேர்வு; மையங்களை இறுதி செய்யும் பணி தீவிரம்
ADDED : ஜன 24, 2026 05:57 AM

புதுச்சேரி: விண்ணப்பம் பெறப்பட்ட 675 புதிய அரசு பணியிடங்களுக்கு இரண்டு கட்டமாக போட்டி தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதேர்வாணையம், தேர்வு மையங்களை இறுதி செய்யும் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. புதுச்சேரி அரசு துறைகளில் மொத்தம் 40 ஆயிரம் அரசு பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 10 ஆயிரம் அரசு பணியிடங்கள் 10 ஆண்டுகளை தாண்டியும் காலியாகவே கிடந்தன. நிதி நெருக்கடி, நியமன விதிகளை காலத்துகேற்ப திருத்தி அமைக்காதது, கோர்ட் வழக்கு என பல்வேறு காரணங்களால் நிரப்பப்படவில்லை.
என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி 2021ம் ஆண்டு பொறுப்பேற்றதும் 10 ஆயிரம் அரசு பணியிடங்களை நிரப்ப முயற்சி எடுத்தது. கடந்த 2022ம் ஆண்டு முதல் இந்த பணி வேகமெடுத்தது. அரசு பணியிடங்கள் படிப்படியாக போட்டி தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இதுவரை 4 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி கடந்த நவம்பர் வரை 675 புதிய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பம் பெறப்பட்டுள்ளன. இப்பணியிடங்களுக்கு 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள் விண்ணப்பித்து போட்டி தேர்விற்காக எதிர்கால கனவுகளுடன் காத்திருக்கின்றனர்.
சட்டசபை தேர்தல் அறிவிப்பிற்கு ஒரு மாதமே உள்ள சூழ்நிலையில், இப்பணியிடங்களுக்கு போட்டி தேர்வு நடத்தப்படுமா என, இளைஞர்கள் மத்தியில் ஒரே கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையில், பட்டதாரிகளுக்கான ஒருங்கிணைந்த போட்டி தேர்வு - சி.ஜி.எல்., இரண்டு கட்டமாக நடத்த தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக மார்ச் 28 முதல் ஏப்ரல் 13ம் தேதி வரையும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 11 முதல் 13ம் வரை நடத்த திட்டமிட்டுள்ளது.
இதற்காக தேர்வு மையங்களை இறுதி செய்யும் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
தேர்வு மையத்திற்காக அரசு பள்ளிகளில் உள்ள உட்கட்டமைப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, பள்ளி கல்வித் துறைக்கு தேர்வாணையம் கடிதம் எழுதி கேட்டுள்ளது.
இருப்பினும் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் இந்த போட்டி தேர்வுகளுக்கு சிக்கல் ஏற்படும். போட்டி தேர்வு தள்ளி போக வாய்ப்பும் அதிகம். ஏனெனில் போட்டி தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்ட மையங்கள் பலவும் ஓட்டுச்சாவடி மையங்களாக உள்ளன. தேர்வு மைய பணிகளில் உள்ளவர்கள் பலரும் தேர்தல் பணியிலும் ஈடுபடுகின்றனர். இப்படி இருக்கும்போது, இவர்கள் தேர்தல் பணிக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டி இருக்கும்.
எனவே, சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகே அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்வுக்கான அட்டவணை இறுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

