விக்சித் பாரத் 2047ம் ஆண்டின் தலைமுறையை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்த மாநாடு
விக்சித் பாரத் 2047ம் ஆண்டின் தலைமுறையை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்த மாநாடு
ADDED : ஆக 31, 2026 06:33 AM

புதுச்சேரி: தேங்காய்த்திட்டில் உள்ள ஆச்சார்யா பால சிக் ஷா மந்திர் வளாகத்தில், விக்சித் பாரத் 2047 இந்தியாவின் தொலைநோக்கு பயணத்தை மையமாக கொண்டு, வளர்ந்த இந்தியாவிற்கு தேவையான தலைமுறையை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்த மாநாடு நடந்தது.
ஏ.ஐ., உடன் ஏ.ஐ., உடனேயே வளர்ந்து வரும் ஜென் ஆல்பா மற்றும் ஜென் பீட்டா தலைமுறையினரையும், தற்போதைய ஜென் இசட் தலைமுறையினரையும், எதிர்கால இந்திய தொழில் முனைவோர்களாகவும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் திறன்மிக்க குடிமக்களாகவும் உருவாக்க, கல்வித் துறையில் இன்றிலிருந்தே மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து மாநாட்டில் பேசப்பட்டது.
2047ம் ஆண்டின் விக்சித் பாரத் உருவாக்கபோகும் மாணவர்களை, இன்றைய கல்விமுறை எவ்வாறு எதிர்காலத்திற்கு தயார்படுத்த வேண்டும். கல்வி நிறுவனங்களின் நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் கல்விச் சூழல் ஆகியவை வெறும் அறிவை பரிமாறும் முறையிலிருந்து விலகி, மாணவர்களின் சிந்தனைத் திறன், படைப்பாற்றல், தொழில்முனைவு மனப்பாங்கு மற்றும் மனிதநேய மதிப்புகளுடன் கூடிய எதிர்கால திறன்களை வளர்க்கும் வகையில் எவ்வாறு மாற்றம் அடைய வேண்டும் என்பது மாநாட்டின் மையக் கருத்தாக அமைந்தது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பேச்சாளர் கோபிநாத் பங்கேற்று, கல்வி மற்றும் எதிர்காலத் தலைமுறையினரின் வளர்ச்சிக்காக செயற்கை நுண்ணறிவை நாம் எவ்வாறு கையாள வேண்டும் என, பேசினார்.
கல்வித் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கும் ஆளுமைகளை கவுரவிக்கும் வகையில், தேசிய அளவிலான 41 சிறப்பு விருதுகள், கவர்னர் கைலாஷ்நாதன் முன்னிலையில் வழங்கப்பட்டன.
ஆச்சார்யா கல்விக்குழும நிர்வாகி அரவிந்தன், விக்சித் பாரத் 2047-ஐ நோக்கிய பயணத்தில் எதிர்கால இந்தியாவை உருவாக்கப் போகும் தலைமுறைக்கான கல்வி எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும், ஏ.ஐ., பள்ளிக் கல்வியின் நோக்கம் அணுகுமுறை எவ்வாறு மாற வேண்டும் என, பேசினார்.
நிகழ்வை டாக்டர் ராஜகுமார் ஒருங்கிணைத்து நடத்தினார்.
