காங்., தலைவர் வீடு மீண்டும் முற்றுகை: வேட்பாளர் ஆதரவாளர்கள் ஆவேசம்
காங்., தலைவர் வீடு மீண்டும் முற்றுகை: வேட்பாளர் ஆதரவாளர்கள் ஆவேசம்
ADDED : மார் 28, 2026 10:55 PM
புதுச்சேரி: புதுச்சேரி காங்., தலைவர் வீட்டை, வேட்பாளர் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி இண்டி கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறி காரணமாக காங்., கட்சியினர் 'பி' படவத்துடன் 23 தொகுதிகளில் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், மனு தாக்கல் முடிந்த பிறகு காங்., 16, தி.மு.க., 14 தொகுதிகளில் என ஒப்பந்தமானது.
ஆனால், தி.மு.க.,விற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் காங்., கட்சியினர் தாக்கல் செய்த மனுக்களை வாபஸ் பெறவில்லை. இதனால், கூட்டணியில் குழப்பம் நிலவியது.
அதனைத் தொடர்ந்து காங்., தலைவர் வைத்திலிங்கம் நேற்று முன்தினம் காங்., போட்டியிடும் 16 தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.
தி.மு.க., போட்டியிடும் 6 தொகுதிகளில் காங்., வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுவை வாபஸ் வாங்காமல், கூட்டணிக்கு எதிராக போட்டியிடுபவர்களுக்கு, காங்., நிர்வாகிகள் எவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டாம். அவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள், தேர்தல் பிரசாரத்தில் கட்சி கொடியை பயன்படுத்தக்கூடாது' என்றார்.
இந்நிலையில், தி.மு.க.,விற்கு ஒதுக்கப்பட்ட காலாப்பட்டு தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ஷாஜகான் ஆதரவாளர்கள் நேற்று காங்., தலைவர் வைத்திலிங்கம் வீட்டை முற்றுகையிட்டு, எப்படி கட்சி ரீதியாக நடவடிக்கை எடுப்பீர்கள் எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை, காங்., தலைவர் வீட்டிற்குள் அழைத்து சென்று, சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.
