UPDATED : டிச 01, 2024 10:32 PM
ADDED : டிச 01, 2024 03:24 PM

சென்னை: கரையைக் கடந்த பெஞ்சல் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுப்பெற்று புயலாக உருவானது. இதற்கு ' பெஞ்சல் ' என பெயர் சூட்டப்பட்டது. இது நேற்று இரவு மாமல்லபுரம் - காரைக்கால் இடையே புதுச்சேரியில் கரையை கடந்தது. இதனால், புதுச்சேரியிலும், விழுப்புரம்,கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கொட்டித் தீர்த்தது. இதனால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாலை 5: 30 மணிக்கு வலுவிழந்தது.
இது தொடர்ந்து மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து, அடுத்த 12 மணிநேரத்தில் வட உள் மாவட்டங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும்.