ADDED : ஏப் 19, 2026 06:56 PM

புதுச்சேரி: புதுச்சேரி, மூலக்குளத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 29ம் தேதி துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாகப் புதுச்சேரிக்கு வருகை தந்தார். அவர் வருகை தரும் சாலைகளை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறை ஈடுபட்டது.
அதன் ஒரு பகுதியாக, மூலக்குளம் - மேட்டுப்பாளையம் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். குண்டும் குழியுமாக இருந்த சாலை அவசர அவசரமாக போடப்பட்டது. சாலை அமைக்கப்பட்டு, சில மாதங்களிலேயே சேதமடைந்தது. தற்போது இந்தச் சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியன் ஓரத்தில், தார் ஒரு பக்கமாகச் சரிந்து மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் சாலை மேடு பள்ளமாக காட்சியளிப்பதோடு, திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
இந்தச் சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் தொழிற்சாலைப் பணியாளர்கள் பயணிக்கின்றனர். மேடு பள்ளமாக மாறியுள்ள சாலையில் நிலைதடுமாறி இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் இந்தக் குவியல்களை கவனிக்காமல் வரும் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகின்றனர். உடனடியாக பொதுப்பணித்துறையினர் சாலையை சீரமைக்க வேண்டும்.
