/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புற்றீசலாக பெருகும் கோச்சிங் சென்டர்களை முறைப்படுத்த முடிவு! நான்கு பிராந்தியங்களிலும் கண்காணிப்பு கமிட்டி அமைப்பு
/
புற்றீசலாக பெருகும் கோச்சிங் சென்டர்களை முறைப்படுத்த முடிவு! நான்கு பிராந்தியங்களிலும் கண்காணிப்பு கமிட்டி அமைப்பு
புற்றீசலாக பெருகும் கோச்சிங் சென்டர்களை முறைப்படுத்த முடிவு! நான்கு பிராந்தியங்களிலும் கண்காணிப்பு கமிட்டி அமைப்பு
புற்றீசலாக பெருகும் கோச்சிங் சென்டர்களை முறைப்படுத்த முடிவு! நான்கு பிராந்தியங்களிலும் கண்காணிப்பு கமிட்டி அமைப்பு
UPDATED : மார் 03, 2026 08:07 AM
ADDED : மார் 03, 2026 04:19 AM

புதுச்சேரி: புதுச்சேரியின் நான்கு பிராந்தியங்களிலும் உள்ள கோச்சிங் சென்டர்களை கண்காணிக்க ஒருகுடையின் கீழ் கொண்டுவரப்பட உள்ளது. நாட்டில் சமீப காலங்களில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் புற்றீசலாக பெருகி வருகின்றன. கல்வி கனவுகளை நனவாக்கும் இடங்களாக இருக்க வேண்டிய இம்மையங்கள், சில இடங்களில் இளைஞர்கள், மாணவர்களின் மனநலனையும், பாதுகாப்பையும் பாதிக்கும் சூழல்களாக மாறியுள்ளன.
இதனை முன்னிட்டு, மத்திய கல்வி அமைச்சகம் 2024ம் ஆண்டு முதல் கடுமையான புதிய வழிகாட்டுதல்களை அறிவித்து, பயிற்சி மையங்களை கண்காணிக்கும் நடைமுறையை தொடங்கியுள்ளது. அதன்படி, புதுச்சேரியிலும் உள்ள கோச்சிங் சென்டர்களை நான்கு பிராந்தியங்களிலும் கண்காணிக்க கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கமிட்டிகளுக்கு புதுச்சேரி, காரைக்காலில் கலெக்டர்களும், மாகி, ஏனாமில் மண்டல நிர்வாகிகள் சேர்மனாக நியமிக்கப்பட்டுள்ளனர். சீனியர் எஸ்.பி.,கள், உயர்கல்வி துறை, பள்ளி கல்வித் துறை அதிகாரிகள், கல்லுாரி முதல்வர்கள் உறுப்பிர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மன அழுத்த கட்டுப்பாடு போட்டித் தேர்வுகளின் கடுமையான அழுத்தம், வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட சூழல்—இவை பல மாணவர்களை மன உளைச்சலுக்கு தள்ளியுள்ளன. கோச்சிங் சென்டர்களில் நடந்த சில துயரமான சம்பவங்கள் நாட்டை உலுக்கின. கல்வி என்பது வளர்ச்சிக்கான பாதையாக இருக்க வேண்டும்; வேதனையாக இருக்கக் கூடாது என்பதற்காகவே இந்த கமிட்டிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சில பயிற்சி மையங்களில் போதிய காற்றோட்டமோ, தீயணைப்பு வசதிகளோ இல்லாத கட்டடங்களில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இது சம்பந்தமாகவும் அடிக்கடி புகார்கள் எழுந்தன. மாணவர்களின் உயிர் பாதுகாப்பு கல்வியைவிட உயர்ந்தது என்ற நிலைப்பாட்டில், இத்தகைய அபாயகரமான சூழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க புதுச்சேரி அரசும் முனைந்துள்ளது.
என்ன நன்மை... கோச்சிங் சென்டர்களில் சேரும்போதே அதிகப்படியான கட்டணங்கள் முழுவதுமாக வாங்கப்படுகின்றன. ஆனால், பாதியில் விலகும் மாணவர்களுக்கு கட்டணத்தை திருப்பித் தருவதில்லை. இந்த நடைமுறைக்கு 'செக்' வைக்கப்பட்டுள்ளது. 16 வயதுக்குட்பட்டவர்களையும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களையும் பயிற்சி மையங்களில் சேர்க்கக் கூடாது. அனைத்து பயிற்சி மையங்களும் மாவட்ட நிர்வாகத்தில் முறையாகப் பதிவு செயதிருக்க வேண்டும்.
பதிவு செய்யாத மையங்கள் சட்டவிரோதமாக கருதப்படும் என விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கோச்சிங் சென்டர்களில் மாணவருக்குப் போதிய இடவசதி, சுத்தமான குடிநீர், தனி கழிப்பறைகள், கண்காணிப்பு வசதி உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. விதிமுறைகளை மீறும் மையங்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.
முதல் முறை விதிமீறலாக இருந்தால், ரூ.25,000 அபராதம், இரண்டாம் முறை விதிமீறலாக இருந்தால் ரூ.1,00,000 அபராதம், தொடர்ச்சியான மீறல்கள் இருந்தால் உரிமம் ரத்து செய்யவும் முடியும் என்பது குறிப்பிடதக்கது. கல்வி என்பது எதிர்காலத்தை வடிவமைக்கும் வாய்ப்பு. மாணவர்களின் கனவுகள் நொறுங்காமல், அவர்களின் மனநலம் பாதிக்கப்படாமல், பாதுகாப்பான சூழலில் கல்வி கற்க வேண்டும் என்பதற்காகவே இந்த கண்காணிப்பு கொண்டுவரப்பட்டுள்ளது என உயர்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

