/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருத்துவ சேர்க்கையை ஏற்க மறுப்பு 64 சென்டாக் மாணவர்களுக்கு சிக்கல்
/
மருத்துவ சேர்க்கையை ஏற்க மறுப்பு 64 சென்டாக் மாணவர்களுக்கு சிக்கல்
மருத்துவ சேர்க்கையை ஏற்க மறுப்பு 64 சென்டாக் மாணவர்களுக்கு சிக்கல்
மருத்துவ சேர்க்கையை ஏற்க மறுப்பு 64 சென்டாக் மாணவர்களுக்கு சிக்கல்
ADDED : நவ 29, 2024 04:01 AM
புதுச்சேரி: முதுநிலை மருத்துவ படிப்பில் 64 மாணவர்களை சிறுபான்மை கல்லுாரி சேர்க்க மறுத்துள்ளதால் அம்மாணவர்களின் எதிர்காலம் சிக்கலாகியுள்ளது.
புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் காலியாக எம்.டி., எம்.எஸ்., இடங்களுக்கு சென்டாக் கடந்த 26ம் தேதி முதற்கட்ட கலந்தாய்வு நடத்தி சீட் ஒதுக்கீடு செய்தது.
அரசு மருத்துவ கல்லுாரியில் அரசு ஒதுக்கீடாக 28 மாணவர்களுக்கு சீட் ஒதுக்கப்பட்டது. பிம்ஸ் மருத்துவ கல்லுாரியில் அரசு ஒதுக்கீடாக-31, நிர்வாக இடங்களுக்கு 4 சீட் ஒதுக்கப்பட்டது. மணக்குள விநாயகர் கல்லுாரியில் அரசு ஒதுக்கீடாக 61, நிர்வாக இடங்களுக்கு - 60 பேருக்கும், வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் -64, நிர்வாக இடங்களுக்கு - 4 சீட் ஒதுக்கப்பட்டது.
இம்மாணவர்கள் நவ., 27ம் தேதி முதல் அடுத்த மாதம் 4ம் தேதி வரை சீட் கிடைத்த கல்லுாரியில் சேர அறிவுறுத்தப்பட்டனர்.
அதன்படி சீட் கிடைத்த மாணவர்கள் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர முற்பட்டபோது, ஒரு சிறுபான்மையினருக்கான கல்லுாரியில் மட்டும் மாணவர்களை சேர்க்கவில்லை.
எங்களுடைய கல்லுாரி சிறுபான்மையினர் கல்லுாரி என்பதால் 50 சதவீதம் தர விருப்பம் இல்லையென வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே இம்மாணவர்களை சேர்க்க முடியாது என தெரிவித்து விட்டது.
அதையடுத்த கொந்தளிப்பு அடைந்த மாணவர்கள், பெற்றோர் சங்கங்களுடன் நேற்று சென்டாக் வளாகத்தில் திரண்டனர். அவர்களிடம் சென்டாக் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சிறுபான்மை கல்லுாரி வழக்கு தொடர்ந்துள்ளது உண்மை தான். ஆனால் மாணவர் சேர்க்கைக்கு எந்த இடைக்கால தடையும் இல்லை. இதனால் தான் சென்டாக் மூலமாக மாணவர்கள் சேர்க்கப்பட்டனர் என, அதிகாரிகள் தெரிவித்தனர். அதை தொடர்ந்து, சுகாதார துறை செயலர் முத்தம்மாவிடம் பெற்றோர் சங்க நிர்வாகிகள் நேரில் சென்று முறையிட்டனர்.
கவுன்சிலிங் விதிமுறைகளின்படி, மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். மாணவர்களை சேர்க்காத மருத்துவ கல்லுாரிக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என அரசு செயலர் முத்தம்மா தெரிவித்தார். அதையேற்று மாணவர்கள், பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.