/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய அரசு வஞ்சிப்பதாக கூறி தி.மு.க., - காங்., வெளிநடப்பு சட்டசபையில் கூச்சல்-குழப்பம்
/
மத்திய அரசு வஞ்சிப்பதாக கூறி தி.மு.க., - காங்., வெளிநடப்பு சட்டசபையில் கூச்சல்-குழப்பம்
மத்திய அரசு வஞ்சிப்பதாக கூறி தி.மு.க., - காங்., வெளிநடப்பு சட்டசபையில் கூச்சல்-குழப்பம்
மத்திய அரசு வஞ்சிப்பதாக கூறி தி.மு.க., - காங்., வெளிநடப்பு சட்டசபையில் கூச்சல்-குழப்பம்
ADDED : பிப் 13, 2025 05:09 AM

புதுச்சேரி: புதுச்சேரிக்கு நிதி தராமல் மத்திய அரசு வஞ்சிப்பதாக கூறி எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் சட்டசபையில் இருந்து, தி.மு.க., - காங்., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி சட்டசபையில் இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு அடுத்த அலுவலுக்கு சபாநாயகர் செல்வம் சென்றார். அப்போது புதுச்சேரியின் நிதி பிரச்னை தொடர்பாக எதிர்க்கட்சிகள் சராமரியாக கேள்வியை எழுப்பின.
எதிர்க்கட்சி தலைவர் சிவா:மத்திய அரசு தொடர்ந்து புதுச்சேரியை வஞ்சித்து வருகிறது. நிதி கமிஷனில் புதுச்சேரியை சேர்க்கவில்லை. மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு கூடுதல் நிதி வழங்கவில்லை. ரயில்வே, துறைமுக விரிவாக்க திட்டங்கள் இடம்பெறவில்லை. நாட்டிலேயே பெஞ்சல் புயலால் புதுச்சேரி அதிகளவில் பாதித்தது.
ஆனால் அதற்கான நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. மத்தியிலும், புதுச்சேரியிலும் ஒரே கூட்டணியின் ஆட்சிதான் நடக்கிறது. மத்திய அரசு புதுச்சேரியை வஞ்சிப்பதை கண்டித்து சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்கிறோம்.
சபாநாயகர் செல்வம்:பெஞ்சல் புயல் நிவாரணமாக மத்திய அரசு ரூ.61 கோடி வழங்கியுள்ளது. கூடுதல் நிதியும் தருவதாக கூறியுள்ளனர்.
அமைச்சர் நமச்சிவாயம்:மத்திய அரசு புதுச்சேரிக்கு தேவையான நிதியை தொடர்ந்து வழங்கி வருகிறது. கடந்தாண்டை விட பட்ஜெட்டிற்கு அதிக நிதி கொடுத்துள்ளது. மத்திய அரசின் ஒத்துழைப்போடு தான் புதுச்சேரியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி இருக்கும் போது தவறான கருத்தை அவையில் சொல்ல வேண்டாம். அரசியல் செய்வதற்கான எதிர்க்கட்சிகள் மத்திய அரசு மீது குற்றம்சாட்டுகின்றன.
அவருக்கு ஆதரவாக அமைச்சர் சாய்சரவணக்குமார், பா.ஜ.,எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு, அசோக்பாபு, ராமலிங்கம், வெங்கடேசன், சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் சிவசங்கர், சீனிவாச அசோக் ஆகியோர் பேசினர்.
இதற்கு எதிராக தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம், அனிபால் கென்னடி, சபம்பத், செந்தில்குமார், நாகதியாகராஜன், காங்., எம்.எல்.ஏக்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் ஆகியோர் ஒரே நேரத்தில் பேசியதால் சபையில் கூச்சல், குழப்பம் நிலவியது.
முதல்வர் ரங்கசாமி: எதிர்க்கட்சிகள் மத்திய அரசு நிதி தரவில்லை என குற்றம்சாட்டி பேசுகின்றனர்.
கடந்த ஆட்சியில் ஒரே ஒரு செங்கல்லைக்கூட எடுத்து வைக்க முடியவில்லை. 5 ரூபாய் கூட மத்திய அரசிடம் இருந்து பெற முடியவில்லை என, உள்துறை அமைச்சராக இருந்தவரே கூறியுள்ளார். தற்போது எத்தனை கோடியில் பணிகள் நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். காலாப்பட்டில் கடந்த 3 நாட்களில் ரூ.30 கோடிக்கு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. எந்த திட்டத்தை அரசு செயல்படுத்தவில்லை கொண்டு வரவில்லை என சுட்டிக்காட்டுங்கள்.
இலவச அரிசி வேண்டும் என மக்கள் கேட்டனர். ரேஷன்கடைகளை திறந்து அரிசி வழங்கியுள்ளோம்.
புயல் நிவாரணமாக அனைத்து ரேஷன் கார்டுக்கும் ரூ.5 ஆயிரம், விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கியுள்ளோம். மத்திய அரசு தேவையான நிதியை வழங்கி வருகிறது.
எதுவுமே இந்த ஆட்சியில் தடைப்படவில்லை. மத்திய அரசின் ஒத்துழைப்புடன் அனைத்து திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். பல்வேறு வகைகளில் கூடுதல் நிதி பெறவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஆறுமுகம் (என்.ஆர்.காங்.,): எதிர்க்கட்சி தொகுதிகளுக்கும் இந்த ஆட்சியில் எல்லாம் கிடைக்கிறது. எங்களை விட அதிக நலத்திட்டங்களை கிடைக்கிறது என்பதை மறுக்க முடியுமா?
பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், ஜான்குமார், கல்யாணசுந்தரம் ஆகியோர், மத்திய அரசு பற்றி எதிர்க்கட்சியினர் பேசிய பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என, வலியுறுத்தினர். சபாநாயகர் செல்வம் குறுக்கிட்ட அனைவரையும் அமைதிப்படுத்தினார்.
இருப்பினும் விளக்கத்தை ஏற்காமல் எதிர்க்கட்சித்தலைவர் சிவா தலைமையில் தி.மு.க., மற்றும் காங்., எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம், கென்னடி, சம்பத், செந்தில்குமார், நாகதியாகராஜன், ரமேஷ்பரம்பத், வைத்தியநாதன் ஆகியோர் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.