குடிநீரில் டி.டி.எஸ்., அதிகம் நேரு எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
குடிநீரில் டி.டி.எஸ்., அதிகம் நேரு எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
ADDED : ஆக 17, 2026 07:32 PM
புதுச்சேரி: நகர பகுதி மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க முதல்வர் ரங்கசாமியை சந்தித்து, நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தினார்.
உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு நேற்று கோரிக்கை மனுவுடன் சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், நகர பகுதி மக்களுக்கு பொதுப்பணித் துறை மூலம் வினியோகிக்கப்படும் குடிநீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை. டி.டி.எஸ்., அதிகமாக உள்ளது. கிராமப்புறங்களில் இருந்து நகர பகுதிக்கு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
பின் நேரு எம்.எல்.ஏ., கூறியதாவது:
குடிநீர் மோசமாக உள்ளது. டி.டி.எஸ்., அதிகரித்துள்ளது. உப்பு கரிக்கிறது. போதாக்குறைக்கு குடிநீரில் பாக்டீரியாக்கள் தாக்கம் உள்ளது.
குடிநீரை அருந்துபவர்கள், வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த குடிநீரை குடிக்க வேண்டாம் என்று டாக்டர்களே சொல்லுகின்றனர்.
தரம் இல்லாத குடிநீரை தொடர்ந்து குடித்தால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். அதிகாரிகள் பாதுகாப்பான குடிநீர் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர். எனவே தான் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து நகர பகுதி மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
