ADDED : ஆக 26, 2026 08:50 PM
எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்புகளுக்கு... வரைவு தரவரிசை பட்டியல் வெளியீடு
புதுச்சேரி: எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு இந்தவாரத்திற்கு முதற்கட்ட கவுன்சிலிங் நடத்த சென்டாக் திட்டமிட்டு, பணிகளை வேகப்படுத்தி வருகிறது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., மற்றும் பி.வி.எஸ்சி., உள்ளிட்ட நீட் மதிப்பெண் மருத்துவப் படிப்புகளுக்கு அரசு, நிர்வாகம், சிறுபான்மையினர் மற்றும் என்.ஆர்.ஐ., ஒதுக்கீடுகளின் கீழ் விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் சென்டாக் வெளியிட்டு ஆட்சேபனை பெற்றது.
இந்த ஆட்சேபனைகளை பரிசீலனை செய்த சென்டாக் தற்போது www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் வரைவு தரவரிசை பட்டியலை, இரண்டாவது முறையாக சென்டாக் வெளியிடப்பட்டுள்ளது. ஜிப்மரில் மருத்துவ சீட் கிடைத்த மாணவர்களின் பெயர்கள் தரவரிசை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
தரவரிசையில் என்ன மாற்றம்:: இந்த ஆண்டிற்கான மருத்துவச் சேர்க்கைக்கு மொத்தம் 6,023 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மெரிட் லிஸ்ட் வெளியிடும்போது அரசு ஒதுக்கீட்டிற்கு 1,745 பேர் இடம் பிடித்து இருந்தனர். ஆட்சேபனைக்கு பிறகு அரசு ஒதுக்கீட்டில் 1,625 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இதேபோல் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான மெரிட் லிஸ்ட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 4,754 பேர் இடம் பெற்று இருந்த நிலையில், ஆட்சேபனைக்கு பிறகு 4,717 பேர் இடம் பிடித்துள்ளனர். மேலும் என்.ஆர்.ஐ ஒதுக்கீட்டில் 414 பேர் இடம் பிடித்த நிலையில், இறுதியாக வரைவு தரவரிசை பட்டியலில் 352 பேர் இடம் பிடித்துள்ளனர். இட ஒதுக்கீட்டு ரீதியாக பார்க்கும்போது, இ.டபுள்யூ.எஸ்., பட்டியலில் –20, ஓ.பி.சி.,–393, எம்.பி.சி.,–431, முஸ்லீம்–67, மீனவர்–60, எஸ்சி.,–268, பி.டி.,–1, முன்னாள் ராணுவ வீரர் வாரிசு–14, விடுதலை போராட்ட வீரர்–33, விளையாட்டு வீரர்–50, அரசு பள்ளி இட ஒதுக்கீடு–28, தெலுங்கு சிறுபான்மையினர் இடங்களுக்கு 9 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மருத்துவ படிப்புகளுக்கு நேரடி இல்லாமல் கணினி கலந்தாய்வாக கவுன்சிலிங் நடத்தப்பட்டு வருகிறது. எனவே, இம்மாதத்திற்குள் மருத்துவ படிப்புகளுக்கு முதற்கட்ட கணினி கலந்தாய்வு நடத்தி சீட் ஒதுக்கப்படுவதுடன், அடுத்த மாதம் 4ம் தேதி வரை கால அவகாசம் தர சென்டாக் திட்டமிட்டுள்ளது.
கட்டணம் என்ன?: கலந்தாய்விற்கு முன்பாக கல்வி கட்டணத்தை வெளியிட்டால் தான், அத்தொகையை மாணவர்கள் தயார் செய்ய முடியும். ஆனால் இன்னும் கல்வி கட்டணம் முழுமையாக வெளியிடப்படாமல் உள்ளது. இரண்டு தனியார் மருத்துவ கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., கட்டணம் இறுதியாகிவிட்டது. ஆனால் ஒரு தனியார் மருத்துவ கல்லுாரியின் கட்டணம் இறுதியாகவில்லை. எனவே கலந்தாய்விற்கு முன்பாக ஓரிரு தினங்களில் எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் முழுமையான கட்டணத்தை சென்டாக் வெளியிட திட்டமிட்டுள்ளது.
