சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை சாதனை
சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை சாதனை
UPDATED : மே 23, 2026 06:03 AM
ADDED : மே 22, 2026 07:43 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் 11 வயது சிறுவனுக்கு சிறுநீரக இலவசமாக மாற்று அறுவை சிகிச்சை செய்து ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை அசத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், சிறுவள்ளிக்குப்பத்தைச் சேர்ந்தவர் உமாமகேஷ்வரி; கூலித்தொழிலாளி. இவரது மகன் குருபிரசாத், 11; சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மாத்திரை, மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே, திடீரென சிறுவனுக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தன. இதனால் டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலைக்கு சிறுவன் சென்றார். இதையடுத்து, புதுச்சேரி, மூலகுளம் ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுவன் குருபிரசாத்திற்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இருப்பினும் சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே நிரந்தர தீர்வாக இருந்தது. சிறுவனின் தாய் உமாமகேஷ்வரி தனது மகனுக்கு ஒரு சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன்வந்தார். இதையடுத்து சிறுவன் குருபிரசாத்திற்கு டாக்டர் ப்ளூ இந்தியா அறக்கட்டளை உதவியுடன் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனை முடிவு செய்தது.
மருத்துவமனையின் சிறுநீரக நிபுணர் மருத்துவர் முருகேசன் வழிகாட்டுதலின்பேரில், மருத்துவர் வெங்கட்ராம் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் சுமார் 4 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து தாயாரிடம் இருந்த சிறுநீரகத்தை எடுத்து மகனுக்கு வைத்தனர். அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த சிறுவன் தற்போது நலமுடன் இருக்கிறார்.
இது குறித்து சிறுநீரக மருத்துவ நிபுணர் முருகேசன் கூறுகையில், தாய் அளித்த சிறுநீரக தானத்தால் சிறுவனுக்கு புதிய வாழ்க்கையையும், அவரது குடும்பத்திற்கு மிகுந்த நிம்மதியையும் வழங்கியுள்ளது. சிறுவனுக்கு செய்யப்பட்டுள்ள இந்த அறுவை சிகிச்சை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் பெரியவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட சிறுநீரகம் சிறுவனுக்கு பொருத்தப்பட்டுள்ளது. சிறுவனுக்கு இலவசமாகவும், வெற்றிகரமாகவும் மாற்று அறுவை சிகிச்சையை மருத்துவ குழுவினர் செய்து முடித்துள்ளனர். மருத்துவமனையில் 68 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் மூளைச்சாவு அடைந்த 5 பேரிடம் இருந்து உடலுறுப்புகள் தானமாக பெறப்பட்டு செய்யப்பட்டுள்ளது' என்றார்.
