பொதுப்பணித்துறை அலுவலகத்தை பணி நீக்க ஊழியர்கள் முற்றுகை
பொதுப்பணித்துறை அலுவலகத்தை பணி நீக்க ஊழியர்கள் முற்றுகை
ADDED : நவ 12, 2024 07:32 AM

புதுச்சேரி: பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணி அமர்த்தப்பட்ட 1300 ஊழியர்கள், கடந்த 2016ம் ஆண்டு தேர்தல் விதிகளை மீறி நியமனம் செய்ததாக கூறி பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து, அவர்களுக்கு மீண்டும் வேலை வழங்கி ரூ.10,500 மாத சம்பளம் வழங்கப்படும் என கடந்த 2023ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
ஆனால், இதுவரையில் அவர்களுக்கு மீண்டும் பணி வழங்கவில்லை. இதைகண்டித்து, பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் தெய்வீகன், சத்தியவதி, வினோத், மணிவண்ணன் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10:30 மணிக்கு தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
அவர்களை ஒதியஞ்சாலை போலீசார் தடுத்து நிறுத்தியதால், அலுவலகம் எதிரே திடீரென சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதில், அரசு அறிவித்தப்படி மீண்டும் வேலை வழங்க வேண்டும். அதுவரையில் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகை போராட்டம் காரணமாக தலைமை பொறியாளர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
