தேர்வு தோல்வி ஒரு உயிருக்கு சமமானது இல்லை :கல்வி ஆலோசகர் ரமேஷ்பிரபா பேச்சு
தேர்வு தோல்வி ஒரு உயிருக்கு சமமானது இல்லை :கல்வி ஆலோசகர் ரமேஷ்பிரபா பேச்சு
ADDED : ஏப் 04, 2026 08:18 PM

புதுச்சேரி: தேர்வில் தோல்வி என்பது ஒரு உயிருக்கு சமமானது இல்லை என, கல்வி ஆலோசகர் ரமேஷ்பிரபா பேசினார்.
புதுச்சேரியில் தினமலர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்ஸ் சார்பில் நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;
தோல்வி ஒரு உயிருக்கு சமமானது இல்லை. மாணவர்கள் தவறான முடிவை எடுக்க கூடாது. நீட் தேர்விற்கு முயற்சி செய்யுங்கள். ஆனால், நீட் உலகம் கிடையாது. நீட்டிற்கான தற்கொலைகள் ஏற்றுக்கொள்ள முடியாது. நீட்டிற்காக நாம் பிறக்கவில்லை. ரிப்பீட்டர்ஸ் என வாழ்க்கையில் ஒரு ஆண்டை வீணடிக்காதீர்கள்.
மாணவர்களை விட, மாணவிகள் தான் அதிகம் தற்கொலை செய்கின்றனர். நீட் தேர்வு உலகம் என்பதை தாண்டி, மிகப்பெரிய உலகம் உள்ளது. நீட் இல்லாத மருத்துவ படிப்புகள் அதிகம் உள்ளது. பி.பார்ம்., உள்ளிட்ட 30 வகையான நான்கு ஆண்டுகள் பி.எஸ்.சி., மருத்துவ படிப்புகள் உளள்ளது. இந்த படிப்புகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு கிடைக்கும்.
கால்நடை மருத்துவ படிப்பு படிக்கலாம். மீன் வளத்துறைக்கு பட்டப்படிப்பு உள்ளது. எப்போதும் தேவை உள்ள வேளாண் படிப்புகள், தோட்டக்கலைத்துறை படிப்புகள், பட்டுப்புழு வளர்ப்பு தொடர்பான படிப்புகளை படிக்கலாம்.
நுழைவு தேர்வு எழுதி அரசு பொறியியல் கல்லுாரிகளில் சேர்ந்தால் கட்டணம் குறைவு. சி.எஸ்சி., ஐ.டி., இ.சி.இ., உள்ளிட்ட படிப்புகளில் மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அதை தவிர்த்து மெக்கானிக்கல், சிவில், ஆட்டோமொபைல்ஸ், வேளாண்மை போன்ற படிப்புகளையும் தேர்வு செய்யலாம்.
பி.ஆர்க்., படிக்கலாம். சட்டப்படிப்புகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பாரம்பரிய கலைநுட்பம் (ஆர்ட்) பாடப்பிரிவுகளை படிக்கலாம். அப்படி படித்தால் ஆர்ட் டைரக்டராக உருவாகலாம். டெக்ஸ்டைல்ஸ் டிசைன் முடித்தால் மத்திய அரசு வேலை கிடைக்கும். செராமிக் டிசைன் படிக்கலாம். பொறியியல் துறையில் உள்ள அனைத்து பாடப்பிரிவுகளும் தற்போது கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் வந்துவிட்டது. பி.ஏ., தமிழ் மற்றும் ஆங்கிலம் படித்தால் கட்டுரை எழுதலாம். மீடியா வளர்ந்துள்ள அளவிற்கு, அந்த துறை சார்ந்த படித்தவர்கள் உள்ளே வரவில்லை. மீடியா தொடர்பான பாடப்பிரிவுகளை படிக்கலாம்.
பி.காம்., பாடப்பிரிவுகளுக்கு தான் லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் வருகிறது. அதற்கான வேலை வாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை விடுதிகளுக்கு அனுப்புங்கள். விடுதி ஒரு மாணவனை சிறந்த முறையில் உருவாக்கும். தினமலர் நாளிதழ் 31வது ஆண்டாக வழிகாட்டி நிகழ்ச்சி நடத்துகிறது. அதில் நான் 31 ஆண்டுகளாக கலந்து கொண்டுள்ளேன் என்பது பெருமையாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
