மின் விளக்கு கம்பம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
மின் விளக்கு கம்பம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ADDED : மே 20, 2026 04:39 AM

புதுச்சேரி: மின் விளக்கு கம்பம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுச்சேரியில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதையடுத்து மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 8 மணிக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யத் துவங்கியது. அடுத்த சில நிமிடங்களிலேயே பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில் மறைமலை அடிகள் சாலை, அந்தோணியர் கோவில் அருகில் சென்டர் மீடியனில் இருந்த மின்கம்பம் திடீரென கீழே விழுந்தது. மழை பெய்ததால் போக்குவரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் எற்படவில்லை. தகவல் அறிந்து பொதுப்பணித்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
தொடர்ந்து பொக்லைன் மூலம் மின் கம்பம் அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின் கம்பம் அகற்றியவுடன் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.
