ADDED : டிச 21, 2024 06:06 AM

திருபுவனை : மதகடிப்பட்டு, அரசு தோட்டக்கலைப் பண்ணையில் உழவர் உதவியகம் சார்பில், புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு புத்துயிர் பெறுவதற்கான ஆலோசனை முகாம் நடந்தது.
புதுச்சேரி வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறையால் 2024 டிச., 19 முதல் 24ம் தேதி வரை நல்லாட்சி வாரம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாடு தழுவிய பிரசாரத்தின் ஒரு பகுதியாக, கிராமங்களை நோக்கி நிர்வாகம், பெங்கல் புயல் காரணமாக நிவாரண உதவிக்கான விண்ணப்பங்கள் விநியோகம் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு புத்துயிர் பெறுவதற்கான ஆலோசனை முகாம் மதகடிப்பட்டு, அரசு தோட்டக்கலைப் பண்ணையில் நடந்தது.
உழவர் உதவியகத்தின் சார்பில், நடந்த முகாமில் புதுச்சேரி தோட்டக்கலை வேளாண் துணை இயக்குனர் சண்முகவேலு தலைமை தாங்கி, கிராமங்களை நோக்கிய நிர்வாகம் என்ற கருப்பொருள் எனும் தலைப்பில், டிஜிட்டல் விவசாயத்தை செயல்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
மதகடிப்பட்டு வேளாண் துணை இயக்குநர் சாந்திபால்ராஜ், வேளாண் அலுவலர்கள் நடராஜன், வினோத்கண்ணன், தனசேகரன், சிவகுமார் ஆகியோர் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு புத்துயிர் பெறுவதற்கான ஆலோசனை வழங்கினர்.
முகாமில் விவசாயிகளிடம் இருந்து நிவாரண உதவிக்கான மனுக்கள் பெறப்பட்டது.
மதகடிப்பட்டு வேளாண்மை அலுவலர் நடராஜன் நன்றி கூறினார்.

