விசைப்படகுகளை கள ஆய்வு செய்து கணக்கெடுக்கும் பணி
விசைப்படகுகளை கள ஆய்வு செய்து கணக்கெடுக்கும் பணி
ADDED : மே 21, 2026 06:33 AM
புதுச்சேரி: புதுச்சேரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய அரசின் மீன்வள அமைச்சகத்தின் உத்தரவுபடி, அனைத்து கடலோர பகுதி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தற்பொழுது நடைமுறையிலுள்ள மீன்பிடி தடை காலத்திற்குள், அனைத்து பதிவு பெற்ற, பதிவு பெறாத மீன்பிடி படகுகளையும், கள ஆய்வு செய்து, அதற்கேற்றாற் போல் இணையதள பக்கத்தை புதுப்பித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
அதனடிப்படையில், தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் மற்றும் உப்பளம் துறைமுகத்தில் உள்ள விசைப்படகுகளை, கள ஆய்வு செய்து கணக்கெடுக்கும் பணி இன்று (21ம் தேதி) ஒரு நாள் மேற்கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.மீன்வளத்துறையின் துணை இயக்குனர் மேற்பார்வையில்கணக்கெடுக்கும் பணி நடைபெறும். கள ஆய்வின் பொழுது, சம்பந்தப்பட்ட விசைபடகு உரிமையாளர் உடன் இருத்தல் வேண்டும்.பதிவு செய்யப்பட்ட படகின் பதிவு எண்ணை தெளிவாக எழுதியிருக்க வேண்டும். படகு சம்பந்தப்பட்ட அசல் ஆவணங்களான பதிவு சான்றிதழ், மீன்பிடி உரிம சான்றிதழ், மானிய டீசல் புத்தகம், காப்பீட்டு ஆவணம்,இயந்திரம், ஜி.பி.ஆர். எஸ்., வி.ஹேச்.எப்., போன்றவற்றை படகில் வைத்து காண்பிக்க வேண்டும்.
பதிவு செய்யப்படாத படகுகள் ஏதேனும் இருப்பின், அவற்றுக்கான அனைத்து ஆவணங்களும் கள ஆய்வின் போது கண்டிப்பாக காண்பிக்கவேண்டும். பதிவு செய்யப்பட்ட படகுகள் கள ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது என்பது அந்தந்த மீன்பிடி படகு உரிமையாளர்களின் பொறுப்பாகும். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட படகுகள் கள ஆய்வில் காண்பிக்கப்படாத பட்சத்தில், அந்த படகுகள் பதிவிலிருந்து நீக்கம் செய்யப்படும். விசைப்படகு உரிமையாளர்களும் இன்றைய தினம் தவறாமல் அவர்களுடைய விசைப்படகுகளை கண்டிப்பாக மீன்பிடி துறைமுகத்தில் உள்ள தங்கு தளத்தில் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.
