தனியார் மதுபாரில் தீ விபத்து சோரியாங்குப்பத்தில் பரபரப்பு
தனியார் மதுபாரில் தீ விபத்து சோரியாங்குப்பத்தில் பரபரப்பு
ADDED : ஜூலை 08, 2026 02:15 AM

பாகூர்: சோரியாங்குப்பத்தில் தனியார் மதுபான கடையில், மது அருந்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த கீற்று கொட்டகை தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றங்கரையில் உள்ள மூங்கில் புதர் நேற்று மாலை திடீரென தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்த பாகூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இந்நிலையில், இரவு சுமார் 8:30 மணியளவில் அங்குள்ள தனியார் மதுபான கடையின் பின்புறம் மது அருந்த அமைக்கப்பட்டிருந்த கீற்று கொட்டகை திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. அப்போது, அங்கு மது குடித்து கொண்டிருந்த குடி மகன்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
தகவலறிந்த பாகூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். காற்றின் வேகமாக வீசியதால், தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
இதையடுத்து, வில்லியனுார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த வாகனம் சம்பவ இடத்திற்கு வர வழைக்கப்பட்டது.
10க்கும் மேற்பட்ட வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில், கொட்டகை மற்றும் அதன் உள்ளே இருந்த மேஜைகள், நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பாலனது. தீ விபத்தின் போது, சிதறி ஓடிய குடிமகன்களில் போதை தலைக்கேறியவர்கள் தங்களது மொபைல் போனில் தீ விபத்தை படம் பிடிக்க துவங்கினர். போலீசார் அவர்கள் அங்கிருந்து விரட்டியடித்தனர்.
தீ விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
