புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மீன் பிடி தடைக்காலம் அமல்
புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மீன் பிடி தடைக்காலம் அமல்
ADDED : ஏப் 13, 2026 06:57 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 14 நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
இது குறித்து, மீன் வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
இந்திய அரசின் மீன்வள அமைச்சக ஆணையின் படி, பிராந்திய நீர்ப்பரப்புகளுக்கு அப்பால் அமைந்துள்ள இந்தியத் தனித்த பொருளாதார மண்டலத்திற்குள், கடல்சார் மீன் வளங்களை நீண்ட காலத்திற்கு நிலை நிறுத்தும் வகையில் அனைத்து மீன்பிடிப் படகுகளும், மீன் பிடித்தலில் ஈடுபட ஜனாதிபதி ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு கடல் நெடுகில் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்கள் மற்றும் மேற்கு கடல் பகுதியில், ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை 61 நாட்களும் தடை விதிக்கப்படுகிறது.
அதன்படி, புதுச்சேரி பிராந்திய நீர்ப்பரப்பிற்குள், இன்று நள்ளிரவு முதல் ஜூன் 14ம் தேதி வரையிலான 61 நாட்கள், கனகசெட்டிக்குளம் முதல் மூ.புதுக்குப்பம் வரையிலும், காரைக்காலில் மண்டபத்தூர் முதல் வடக்கு வாஞ்சூர் வரையிலும் மற்றும் ஏனாம் மீன்பிடிப்பு பகுதியை உள்ளடக்கிய இடங்களில் பாரம்பரிய மீன்பிடி படகுகளான கட்டு மரம், நாட்டு படகுகளை தவிர, இயந்திரம் பொருத்திய பைபர் படகுகள் மற்றும் இழுவலை கொண்டு விசைப்படகில் மீன்பிடிப்பது தடை செய்யப்படுகின்றது.
அதேபோல், மாகே பகுதியில் வரும் ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை 61 நாட்கள் மீன் பிடிக்க தடை செய்யப்படுகின்றது.
