ADDED : செப் 21, 2024 06:25 AM
புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்தவர் டாக்டர் ஸ்ரீதேவி, 88; புதுச்சேரி நகராட்சியின் முன்னாள் தி.மு.க., மேயர். இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். உறவினர்களுக்குள் சொத்து பிரச்னை உள்ளது.
இவரது மகன் வழி பேத்தி டாக்டர் பிரத்திகா, ஸ்ரீதேவியின் வங்கி கணக்கு மற்றும் மொபைல்போன் மூலம் ரூ. 9 லட்சம் வரை பணம் எடுத்து மோசடி செய்துள்ளதாக ஸ்ரீதேவி சென்னை போலீசில் புகார் அளித்தார். சென்னை போலீசார் கடந்த பிப்., மாதம் பேத்தி பிரத்திகா மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர்.
ஸ்ரீதேவியின் வங்கியில் இருந்து பணம் எடுக்கப்பட்டது புதுச்சேரியில் என்பதால், இந்த வழக்கு புதுச்சேரி போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஸ்ரீதேவியின் பேத்தி மீது உருளையன்பேட்டை போலீசார் மோசடி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
