ADDED : ஆக 31, 2026 07:51 PM
: புதுச்சேரி: ரியல் ஸ்டேட் செய்யலாம் என ஆசை வார்த்தை கூறி 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபரை சைபர் கிரைம் போலீசார் தேடிவருகின்றனர்.
முதலியார்பேட்டை ஜெயமூர்த்தி ராஜா நகரை சேர்ந்தவர் திருவரசன், 47; இன்சூரன்ஸ் ஏஜன்டாக பணி செய்து வருகிறார். இவரது மொபைலுக்கு கடந்த 24ம் தேதி வாட்ஸ் ஆப் மூலம் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினர். அதில், ரியல் ஸ்டேட் தொழில் செய்வதற்கு உள்ளூரில் இருந்து ஆள் தேவைப்படுகிறது என கூறினார்.
அதை நம்பிய அவர் 6 கோடி ரூபாயில், வங்கியில் இருந்து தனது பெயரில் டி.டி., எடுத்து வைத்திருந்தார். இந்த தொழில் செய்ய அரசுக்கு முதலில் முத்திரைத்தாள் கட்டணம் கட்ட வேண்டும், அதற்காக 10 லட்சம் ரூபாயை அனுப்பமாறு கூறினார். அதையடுத்து, இவர் தனது வங்கி கணக்கில் இருந்து 10 லட்சம் ரூபாயை அந்த நபருக்கு அனுப்பினர்.
அதன் பிறகு அந்த நபரின் மொபைல் சுவிட்ஸ் ஆப் செய்யப்பட்டிருந்தது. பிறகு தான் அந்த நபர் மோசடி செய்யும் கும்பல் என தெரியவந்தது. திருவரசன் புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடிவருகின்றனர்.
