பள்ளிகளில் பிரெஞ்சு மொழி ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
பள்ளிகளில் பிரெஞ்சு மொழி ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
ADDED : ஏப் 29, 2026 04:40 AM
புதுச்சேரி: புதுச்சேரி பள்ளிகளில் பிரெஞ்சு மொழி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டுமென யூனியன் பிரதேச பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கூட்டமைப்பு தலைவர் எட்வர்டு சார்லஸ் அறிக்கை:
புதுச்சேரியில் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் பிரெஞ்சு மொழி பாடத்திட்டம் நீக்கப்பட உள்ளது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் புதிய விதியின்படி மூன்று மொழிகளில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால் பிரெஞ்சு மொழியை மாணவர்கள் பாடத்திட்டத்தில் தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, புதுச்சேரியின் தனித்தன்மையை காத்திடவும், பிரெஞ்சு மொழி பயிலும் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும், அரசு உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து, சிறப்பு அனுமதியுடன் பிரெஞ்சு மொழி தொடர வழி வகை செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
