கல்வி முறையில் பிரெஞ்சு மொழி நீடிக்கும்: பா.ஜ., மாநில தலைவர் திட்டவட்டம்
கல்வி முறையில் பிரெஞ்சு மொழி நீடிக்கும்: பா.ஜ., மாநில தலைவர் திட்டவட்டம்
ADDED : மே 23, 2026 04:14 AM
புதுச்சேரி: பிரெஞ்சு மொழியும் கல்விமுறையில் நீடிக்கும் என, பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை;
புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழி நீக்கப்படுவதாக கூறப்படும் விவகாரத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை. மத்திய வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) புதிய மும்மொழி கொள்கை வழிகாட்டுதலால் பிரெஞ்சு மொழிக்கு ஏற்பட்டுள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து, பா.ஜ., தேசிய தலைமை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, புதுச்சேரி வரலாற்றுப் பின்னணி மற்றும் பிராந்தியத் தேவைகளை விளக்கி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் நேரடியாகவும், விரிவாகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
புதுச்சேரிக்கு இந்த விதிகளில் இருந்து மிக விரைவில் சிறப்பு விலக்கு பெற்றுத்தரப்படும். நம்முடைய பிராந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றுடன் பிரெஞ்சு மொழியும் நமது கல்வி முறையில் தொடர்ந்து நீடிப்பதை தே.ஜ., கூட்டணி அரசு உறுதி செய்யும்.
மேலும் 1956 மற்றும் 1962 புதுச்சேரி இந்திய யூனியன் உடன் இணைக்க மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நமது உரிமைகளை பாதுகாக்கும். திட்டமிட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை விளைவித்து, அரசியல் ஆதாயம் தேட எதிர்க்கட்சிகள் முயல்கின்றன. எனவே, எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரசாரங்களையும், வதந்திகளையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என, அவர் தெரிவித்தார்.
